என்ஆர்சி – தடுப்பு முகாம்களை அமல் படுத்துவது ஏன் மிக, மிக கடினமானது?
- ஆர்.மணி
டெல்லி: இன்று ஏக இந்தியாவையும் வாட்டி, வதைத்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயம் தேசீய குடியுரிமை பதிவேடு - National Register of citizens NRC - என்ஆர்சி. யார் இந்திய குடிமக்கள் யார் இந்திய குடிமக்கள் இல்லை என்பதை தீர்மானிப்பதற்காக உருவாக்கப் பட்ட திட்டம், விஷயம்தான் இது.
என்ஆர்சி யின் மையப்புள்ளி அசாமிலிருந்து துவங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம், அசாமில் இந்தியர்கள் அல்லாதவர்கள் பெருமளவில் ஊடுருவி விட்டதாக சொல்லி என்ஆர்சி யை தயாரிக்க மத்திய அரசுக்கும், அசாம் அரசுக்கும் உத்திரவிட்டது. ஆம். உச்சி நீதிமன்றத்தின் தீர்ப்புதான் நாடே பற்றியெறிந்து கொண்டிருக்கும் இந்த விவகாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது.
அசாமின் மக்கள் தொகை சுமார் 3 கோடிக்கும் மேலாக இருக்கிறது. என்ஆர்சி பணிக்காக 52,000 அசாம் மாநில அரசு ஊழியர்கள் களத்தில் இறங்கினர். 200 மேற்கும் ஏற்பட்ட இதற்கான மையங்கள் (சேவா மையங்கள்) திறக்கப் பட்டன. எப்படி என்ஆர்சி தயாரிப்பது, என்னென்ன அளவுகோள்களின்படி இதனை தயாரிப்பது என்பது பற்றியெல்லாம், இந்த பணியின் ஒவ்வோர் கட்டத்திலும் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து அறிவுறுத்தியும், உத்திரவுகளை பிறப்பித்தும் வந்தது. பல முறை உச்ச நீதிமன்றம் இந்த பணியில் ஈடுபட்டிருந்த அசாம் அரசு அதிகாரிகளை இடம் மாற்றம் செய்தது.
குடியரிமையை தீர்மானிக்க எந்த ஆவணங்கள் பிரதான ஆவணங்களாக இருக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றமே தீர்மானித்தது. அதன்படிதான் 1971 ம் ஆண்டுக்கு முந்தய ஆவணங்கள் குடியுரிமையை தீர்மானிக்கும் ஆவணங்களாக தீர்மானிக்கப் பட்டன. அதன்படி அசாமில் வசிக்கும் ஒருவர் தன்னுடைய குடியுரிமைக்காக விண்ணப்பிக்கிறார் என்றால், அவரது தந்தை அல்லது தாய் அல்லது சம்மந்தப்பட்ட அந்த நபர் 1971 ம் ஆண்டுக்கு முன்பே வைத்திருந்த ஆதாரங்கள் சமர்பிக்கப் பட வேண்டும். இந்த ஆவணங்களில் முக்கியமானவை கீழ்கண்டவை; 1. நில பத்திரங்கள் 2. எல்ஐசி பாலிசிகள் 3. வாக்காளர் அடையாள அட்டைகள் 4. வங்கி பாஸ்புக்குகள் 5. பள்ளிச் சான்றிதழ்கள். நினைவில் கொள்ள வேண்டும், இவை அனைத்தும் 1971 ம் ஆண்டுக்கு முந்தவையாக இருக்க வேண்டும்.
இங்குதான் சிக்கல் வந்தது. பல லட்சக்கணக்கானவர்களால் 1971 ம் ஆண்டுக்கு முந்தய ஆவணங்களை சமர்பிக்க முடியவில்லை. 48 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தங்களது தாய், தந்தையரது ஆவணங்களை சமர்ப்பிக்க லட்சக்கணக்கானவர்களால் முடியவில்லை. அதனது விளைவுதான் இன்று 19 லட்சம் பேர் அகதிகளாக அசாமில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதில் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஃபக்குரீதின் அலி அகமதின் வழி தோன்றல்களும், கார்கில் யுத்தத்தில் இந்தியாவின் மானத்தை காக்க போராடி, அரசிடமிருந்து பதக்கங்களை வென்று தற்போது ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியும் அடக்கம்.
கடந்த 2018 ம் ஆண்டு செப்படம்பரில் அசாமின் முதல் என்ஆர்சி வெளியில் வந்ததது. அதன் பிறகுதான் எத்தகைய குளறுபடிகள் நடைபெற்றன என்பது தெரிய வந்திருக்கிறது. சரி. இப்போதய பிரச்சனை என்ன? 2019 ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது முறையாக பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பின்னர் நாடாளுமன்றத்தில் பல முறை மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா சொன்ன விஷயம்தான் அது; 'என்ஆர்சி யை 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு நாங்கள் ஒட்டு மொத்த இந்தியாவிலும் அமல் படுத்துவோம்'. இங்குதான் வில்லங்கம் ஆரம்பித்தது. என்ஆர்சி க்கும், அதில் விடுபட்டவர்களை தங்க வைப்பதற்காக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும், கட்டப் பட போகிருக்கும் தடுப்பு முகாம்கள் - Datention Camps - தான் இன்று மிக பெரிய பிரச்சனையாக பூதாகரம் எடுத்து நின்று கொண்டிருக்கிறது.
இந்த கட்டுரையில் நாம் என்ஆர்சி மற்றும் தடுப்பு முகாம்கள் இவை இரண்டும் சரி, தவறு என்ற வாதத்தில் இறங்காமல் - ஏனெனில் இது குறித்து ஏராளமாக பல தரப்பிலிருந்தும் பேசப்பட்டு விட்டதால் - இது சாத்தியாமா, அதாவது அரசே நினைத்தாலும், முயற்சித்தாலும், என்ஆர்சி மற்றும் அகதி முகாம்களை, குறிப்பாக அகதி முகாம்களை அமைக்க முடியுமா, அதற்கான நிதியாதரங்கள் மத்திய அரசிடம் இருக்கிறதா என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
அசாமில் என்ஆர்சி யை செய்து முடிக்க இதுவரையில் 1,200 கோடி ரூபாய்கள் செலவாகியிருக்கிறது. 3 கோடி மக்களுக்கு இந்த தொகை என்றால், 130 கோடியுள்ள இந்தியாவில் இதனை செய்து முடிக்க குறைந்தது 50,000 கோடி ரூபாய்கள் ஆகும். இதில் மக்கள் தொகை அடர்த்தி (Population density) அதிகமாக உள்ள உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் செலவு இன்னமும் கூடுதலாக ஆகும்.
அடுத்தது தடுப்பு முகாம்கள். அசாமில் தற்போது பத்து தடுப்பு முகாம்களுக்கு இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளது. 3,000 பேர் தங்கும் ஒரு அகதி முகாமை அமைக்க அரசு 45 கோடியை செலவழித்துக் கொண்டிருக்கிறது. இதன்படி பார்த்தில் இந்தியாவின் உள்ள 130 கோடி பேரில் ஒரு சதவிகித தினர் குடியுரிமை அற்றவர்களாக கண்டறியப்பட்டால் (குறைந்த பட்ச மதிப்பீடு இது) அவர்களுக்கான தடுப்பு முகாம்களை அமைக்க குறைந்தபட்சம் 1.30 லட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படும். இது முதன் முறையாக ஆகும் செலவு. அடுத்தது ஆண்டு தோறும் அங்கு தங்கியிருக்கும் குடியுரிமை அற்றவர்களின் உணவு, மருத்துவம், குழந்தைகளின் கல்வி இவற்றுக்கு ஆகும் செலவு பல ஆயிரம் கோடிகளாக இருக்கப் போகிறது.
எங்கேயிருந்து வரப் போகிறது இந்த பணம்? இன்று இந்தியா வரலாறு காணாத வளர்ச்சியின்மையாலும், வேலையில்லா திண்டாட்டத்தாலும் திணறிக் கொண்டிருக்கும் போது இந்த சில லட்சம் கோடி ரூபாயை ஆண்டு தோறும் எங்கேயிருந்து பெறப் போகிறது? ஆகவே மோடி அரசு ஏன் இந்த திட்டத்தை தொடர்ந்து செயற்படுத்துவோம் என்று அடம் பிடிக்கிறது? இது அமல்படுத்த முடியாத சட்டம், திட்டம் என்றாலும் ஏன் மோடி அரசு இதில் இவ்வளவு முக்கியத்துவம் காட்டுகிறது. இதற்கான பதிலை பிபிசி செய்தி நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு கட்டுரையில் கீழ்கண்டவாறு கூறுகிறது; "இந்திய குடியுரிமை இழந்தவர்களுக்கு இந்தியாவில் சொத்துரிமை இருக்குமா? அரசின் நலத்திட்டங்களை பெற அவர்களுக்குத் தகுதி இருக்குமா? என்பதில் எந்த தெளிவும் இல்லை. ஒரு விஷயம் நடக்கலாம். குடியுரிமை இல்லாதவர்கள் சில காலம் தடுப்பு முகாம்களில் தங்கி பிறகு வெளியில் வந்த பிறகு அவர்களுக்கு வேலை செய்யும் அனுமதி - அதாவது Work Permit - வழங்கப்படும். ஆனால் ஓட்டு போடும் உரிமை வழங்கப்பட மாட்டாது.
இதுவரையில் எந்த அரசியல் கட்சியும் இந்த கோணத்தில் பேசத் துவங்கவில்லை .... இந்தியாவின் இன்றைய ஆட்சியாளர்களின் கடந்த கால வரலாற்றை வைத்துப் பார்க்கையில் பிபிசி யின் கருத்தை அப்படியே ஒதுக்கித் தள்ளுவது கடினமான செயல்தான்.