அமைச்சரவை மாற்றத்தால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.. சொல்கிறார் ஜெய்ராம் ரமேஷ்
டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றத்தால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமைச்சரவையில் இன்று மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், நாட்டில் தற்போது நடந்து கொண்டிருப்பது தனி நபர் ஆட்சி. எனவே மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பும், பின்பும் எந்த வித்தியாசமும் இருக்க போவதில்லை.
நிலம் கையகப்படுத்தும் நாடாளுமன்ற கூட்டு குழுவின் தலைவரான எஸ்.எஸ்.அலுவாலியாவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலம் கையகப்படுத்தும் மசோதாவின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது என்றார்.
அதே போல் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உடையதாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவி அளிக்க வேண்டும் என் உவைசியின் கோரிக்கை குறித்து கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா இல்லையா என்பதுதான் முக்கியமான பிரச்னையே ஒழிய, உவைசி என்ன சொன்னார் என்பது ஒரு பிரச்னையே கிடையாது.
முழுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் விசாரணை நடத்தி உண்மையிலேயே அவர்களுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.