பங்குனி வெயில் பல்ல காட்டி அடிக்கும்போது பெங்களூருவில் ஒரே 'பனிகூட்டமா' இருக்கு பாருங்க!
பெங்களூர்: இந்த புகைப்படங்களை பார்த்தால் இது பெங்களூருவா அல்லது அமெரிக்காவின் பனிப்பொழிவு கால காட்சியா என்ற சந்தேகம் எழுவது இயற்கையே.
இது பெங்களூருதான், ஆனால் அது பனிக்குவியலில்லை. அச்சுறுத்தும் கழிவு குவியல் என்பது ஆபத்தான சேதி.
பெங்களூரு அருகேயுள்ளது பைரமங்களா ஏரி. இங்கு காவிரியின் துணை நதி விருஷபாவதி வந்து கலக்கிறது.
இங்கிருந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் விவசாயத்திற்காக திறந்து விடப்படுகிறது. ஆனால், பெங்களூர் நகரம் பெரிதாக விரிவடைந்த பிறகு, ஆலை கழிவுகள், இந்த நதியில் கலக்கத் தொடங்கின. சுமார் 500 மில்லியன் லிட்டர் அளவுக்கு நாள் ஒன்றுக்கு, கழிவு நீர் நதி நீரில் கலக்கிறது.
இதன்விளைவாக பொங்கும் நுரையுடன் காட்சியளிக்கிறது நதி நீர். நதியில் கலப்பதற்காக, பிடதி உள்ளிட்ட மேற்கு பெங்களூரு பகுதிகளில் இருந்து சாக்கடை வழியாக ஓடும், கழிவு நீர் மக்களின் கண்முன்பு சாட்சியாக நிற்கிறது.
அது சில நேரங்களில் பொங்கி சாக்கடையில் இருந்து மேலெழுந்து பெங்களூருவின் சாலையோரங்களில் மலைபோல குவிந்து கிடக்கிறது. இதைத்தான் இந்த போட்டோக்களில் பார்க்கிறீர்கள்.