தினகரனை சந்தித்தது உண்மை தான்.. சுகேஷ் அளித்த வாக்குமூலத்தில் திடுக் தகவல்கள் !
டிடிவி தினகரனை சந்தித்தது குறித்து அவர் முன்னிலையிலேயே சுகேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து கைது செய்யப்பட்ட சுகேஷ், தினகரனை சந்தித்தது குறித்து அவர் முன்னிலையிலேயே வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் தினகரனுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி ஆகிய இரு அணிகளும் கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரின. அடுத்து இரட்டை இலை சின்னம், கட்சி பெயரை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை மீட்க சசிகலா தரப்பு தீவிர முயற்சி செய்தது.
இதனிடையே கடந்த 17ஆம் தேதி பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக, ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதில் முன் பணமாக ரூ.1.30 கோடியை டிடிவி தினகரன் கொடுத்ததாகவும் சுகேஷ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதனால், டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பிய டெல்லி போலீசார் நேரில் ஆஜராகக் கோரி உத்தரவிட்டனர். அதன்பேரில் கடந்த சனிக்கிழமை டெல்லி சென்ற தினகரனிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக தினகரனிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விசாரணையில் தினகரன் அளித்த பதில்கள் போலீஸாருக்கு திருப்திகரமாக இல்லை என்பதால் சுகேஷை நேரடியாக அழைத்து வந்து தினகரனுக்கு முன்பாக வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது தினகரனை சந்தித்தது குறித்து அவர் முன்னிலையிலேயே சுகேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகத்தில் வைத்து தினகரன் தரப்பிடம் முன்பணம் பெற்றதாக போலீஸ் காவலில் சுகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். சுகேஷை சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மூலம் தினகரன் தொடர்பு கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தினகரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் டிடிவி தினகரன் கைது செய்யப்படலாம் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.