என்னதான் நடக்குது ஐடி துறையில்.. அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் குதிக்கிறது மத்திய அரசு!
டெல்லி: ஐடி துறையில் பெருமளவில் வேலையிழப்புகள் நடந்து வருவதால் மொத்த துறையினரும் பெரும் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் ஐடி துறைக்கு எதுவும் ஆகாது, தைரியமாக இருங்கள் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
மேலும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார். ஜூன் 16ம் தேதி முன்னணி நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகள் கூட்டத்தை ரவி சங்கர் பிரசாத் கூட்டியுள்ளார்.
டெல்லியில் இது நடைபெறும். இதில் பிளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால், குயிக்ஹீல் நிறுவனர் கைலாஷ் கத்கர், லாவா இன்டர்நேஷனல் தலைவர் ஹரி ஓம் ராய், கூகுள் நிறுவனத்தின் ராஜன் ஆனந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
20க்கும் மேற்பட்ட ஐடி நிறுவன தலைவர்கள், தலைமை செயலதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. எனவே ஐடி நிறுவனங்கள் பயம் கொள்ளத் தேவையில்லை. பெருமளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
சலுகைகள் கிடைக்கலாம்
இந்தக் கூட்டத்தில் பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில் மத்திய அரசு தேவையானதைச் செய்யவுள்ளதாம். மேலும் ஐடி நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு செய்யும் என்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முதல் முறையாக
இந்தியாவில் இதுபோன்ற சந்திப்பு நடப்பது இதுதான் முதல் முறையாகும் என்பதால் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சந்திப்பு இதற்கு முன்பு நடந்ததில்லை. மேலும் எதிர்காலத்தில் ஐடி, டெலிகாம் ஆகிய துறைகளை விட இ காம், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சைபர் செக்யூரிட்டி, டிஜிட்டல் கட்டணம் செலுத்துதல் போன்ற துறைகள் பெரும் வளர்ச்சியைச் சந்திக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி உள்ளது.. வேலை இல்லை
ஐடி துறை தற்போது 8 சதவீத அளவில் வளர்ச்சியில் உள்ளது. அதேசமயம், வேலைவாய்ப்பு என்பது 5 சதவீதம் குறைந்து விட்டது. எனவேதான் ஐடி துறையினர் ஆட்டம் கண்டுள்ளனர். இதை சரி செய்யும் முயற்சியில்தான் தற்போது அரசு குதித்துள்ளதாக தெரிகிறது.