பெங்களூரில் கருப்பு பண பதுக்கல்- ரெய்டுக்கு போன அதிகாரிகள் மீது வேட்டை நாயை ஏவிய மூதாட்டி!
பெங்களூரில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது வேட்டை நாய்களை மூதாட்டி ஏவியுள்ளார். அந்த வீட்டில் ரூ2.25 கோடி புதிய ரூ2,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூர்: கருப்பு பண பதுக்கலை மீட்க சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது பெங்களூர் மூதாட்டி வேட்டை நாய்களை ஏவிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் யஷ்வந்த்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சென்றது.
ஆனால் வீட்டில் இருந்த மூதாட்டி அதிகாரிகளை அனுமதிக்க மறுத்தார். அவரை மீறி அதிகாரிகள் உள்ளே செல்ல முயன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி வீட்டில் இருந்த 2 வேட்டை நாய்களை அதிகாரிகள் மீது ஏவிவிடப் போவதாக மிரட்டினார். பின்னர் சோதனை நடத்தாமல் திரும்பிய அதிகாரிகள் போலீசாரை அழைத்துக் கொண்டு சென்றனர்.
போலீசார் வேட்டை நாய்களை அப்புறப்படுத்த, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ2.89 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ2.25 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கருப்பு பண பதுக்கலை மீட்க சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது பெங்களூர் மூதாட்டி வேட்டை நாய்களை ஏவிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.