தெலுங்கானா பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழப் போகும் சாப்ட்வேர் துறை
ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்டு தெலுங்கானா தனி மாநிலம் ஆகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ஐ.டி. மற்றும் பார்மசுட்டிக்கல்ஸ் துறைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் மின் தயாரிப்பு, துறைமுகங்கள், எண்ணெய் மற்றும் கேஸ் ஆகியவை மூலமும் வருமானம் வரும் என்று தெரிகிறது.
தெலுங்கானா தனி மாநிலம் ஆனால் ஆந்திராவின் ஒரு பகுதியான ராயலசீமாவின் வருமானம் பாதிக்கப்படும் என்று லோக் சத்தா கட்சியின் தேசிய தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜெயபிரகாஷ் நாராயண் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் போக்குவரத்திற்கு பெரும்பாலும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தையே நம்பி இருக்க வேண்டி இருக்கும். தெலுங்கானா தனிமாநிலமான பிறகு 2,000 மெகாவாட் வரை மின்பற்றாக்குறை ஏற்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா பிரச்சனை எல்லாம் முடிந்த பிறகு அது ஐ.டி. துறையில் அதிக முதலீடுகளை பெறும் என்று தெலுங்கானா தொழில்நுட்பத் துறை அசோசியேஷன் நிறுவனர் சந்தீப் குமார் மக்தலா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஹைதராபாத்தில் முதலீடு செய்ய விரும்பிய பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு நடக்கும் பிரச்சனைகளால் தங்கள் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளன. தற்போது நாடாளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து முதலீடுகள் வந்து குவியும். அனைத்து முன்னேற்றங்களும் ஹைதராபாத்தை மையப்படுத்தியே இருக்கும் என்பதால் வாரங்கல், கரீம்நகர் ஆகிய நகரங்களை ஐ.டி. மையங்களாக ஆக்க வேண்டும்.
ஐ.டி. நிறுவனங்களுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் தேவைப்படுவதால் தெலுங்கானாவில் மின் சக்தி உற்பத்தி நிலையங்களை அமைக்க வேண்டும் என்றார்.