இது வெறும் தொடக்கம்தான்.. நாடாளுமன்ற தேர்தல்ல பாருங்க.. பாஜகவிற்கு சவால் விடும் தேவ கவுடா
கர்நாடகா மாநிலத்தில் மஜத ஆட்சி அமைப்பது வெறும் தொடக்கம்தான் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பெரிய அளவில் பாடம் கற்பிப்போம் என்று அந்த கட்சியின் தேசிய தலைவர் தேவ கவுடா பேட்டியளித்துள்ளார்.
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் மஜத ஆட்சி அமைப்பது வெறும் தொடக்கம்தான் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பெரிய அளவில் பாடம் கற்பிப்போம் என்று அந்த கட்சியின் தேசிய தலைவர் தேவ கவுடா பேட்டியளித்துள்ளார்.
கர்நாடகாவில் 104 இடங்களில் பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.
இதனால் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி. அவர் புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார்.
நேற்று சட்டசபையில் நம்பிக்கெடுப்பிற்கு எல்லோரும் காத்திருக்கும் நிலை ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலையில், திருப்பதியில் சாமி தரிசனம் செய்து கொண்டு பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டு இருந்தார், மஜத கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா. அவருக்கு மதியம் 1 மணிக்கே எடியூரப்பா பதவி விலகும் விஷயம் தெரிந்துள்ளது. தற்போது குமாரசாமி ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில், தேவகவுடா சந்தோசமாக பேட்டி அளித்துள்ளார்.
பாஜக கட்சி இடம் தெரியாமல் மோதிவிட்டது. அவர்களுக்கு இப்போது நாங்கள் யார், எங்கள் கட்சி எப்படிப்பட்டது என்று தெரிந்திருக்கும். இப்போது அவர்கள் எங்களை பற்றியும் கர்நாடக மக்களின் விருப்பங்களை பற்றியும் புரிந்து கொண்டு இருப்பார்கள்.
நேற்று என் பிறந்த நாளை மிகவும் சந்தோசமாக கொண்டாடினேன். இதை சிறந்த பிறந்த நாள் பரிசாக பார்க்கிறேன். இது கர்நாடகாவிற்கான சிறந்த தருணம். கண்டிப்பாக நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. அதனால்தான் பிறந்த நாள் அன்று நல்ல சேதி வரும் என்று எல்லோருக்கும் தெரிவித்து இருந்தேன்.
எனக்கு என் மகனை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நினைத்தான் அவன் சாதித்துவிட்டான். பத்து வருடங்களுக்கு பின் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறோம். கர்நாடக மக்களுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். இது மிகப்பெரிய வெற்றி. காங்கிரஸ் பெரிய அளவில் எங்களுக்கு உதவியது என்றுள்ளார்.
ஆனால் இதுவெறும் தொடக்கம்தான். இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறோம். எங்களுடைய முழுமையான அரசியல் வெற்றியை நீங்கள், நாடாளுமன்ற தேர்தலில்தான் பார்ப்பீர்கள். அப்போது மாநில கட்சிகளின் பலம் பாஜகவிற்கு தெரியும் என்று பேட்டியை முடித்துள்ளார்.