ராவணன் தலையில் கை வைத்த விலைவாசி உயர்வு: வட மாநிலங்களில் சுவாரசியம்
ஜெய்ப்பூர்: விலைவாசி உயர்வு ராணவன் தலையிலேயே கை வைத்த சம்பவங்கள் இந்த ஆண்டு தசராவில் சாதாரணமாக காண கிடைத்தது.
வட இந்தியாவில் தசரா பண்டிகையின்போது ராவண வதம், காட்சி பொது இடங்களில் நிகழ்த்தி காண்பிக்கப்படும். பிரமாண்ட ராவணன் உருவ பொம்மைகளை பொது இடங்களில் வைத்து, ராமர் பாணத்தால் அதை துளைப்பதும், நெருப்பால் கொளுத்துவதும், வட இந்தியாவில் பாரம்பரியம்.
ராவண வதம்
ராவணனுக்கு பத்து தலைகள் இருந்ததாக ராமாயண காப்பியம் கூறுகிறது. ஸ்ரீராமருடன் போரிட்டபோது, ராவணன் பத்து தலைகளுடன் போரிட்டதற்கான குறிப்புகள் புராணங்களில் காணக்கிடைக்கிறது. எனவே பத்து தலைகளுடன் கூடிய உருவ பொம்மைகளை வைத்துதான் ராவண வதம் நிகழ்ச்சி வட இந்தியாவில் நடத்தப்படும்.
ஒற்றைத் தலை
ஆனால் இந்த ஆண்டு ஒற்றை தலை ராவணன் பொம்மைகள்தான் பெரும்பாலான பகுதிகளில் எரிக்கப்பட்டன. அதிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் இதுபோன்ற ஒற்றைத்தலை ராவணன் பொம்மைகளுக்குத்தான் இந்த ஆண்டு அதிக தேவை இருந்ததாம்.
விலை குறைவு
ராஜஸ்தானில் ராவணன் பொம்மைகளை விற்பனை செய்த ஜெகதீஷ் ஜோகி என்ற வியாபாரி கூறுகையில், "இந்த வருடம் விலை குறைந்த ராவணன் பொம்மைகளை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். 10 முதல் 30 அடி உயரம் வரையிலுள்ள ராவணன் பொம்மைகள் அதிகமாக விற்பனையாகின" என்றார்.
ராவணன் தலையிலேயேவா..
விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதால், ராவணன் தலையிலேயே கைவைத்துவிட்டனர் மக்கள்.