அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ளது அல்டிமேட் தீர்ப்பு.. அகழாய்வு செய்த அதிகாரி முகமது மகிழ்ச்சி!
கோழிக்கோடு: இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஏ.எஸ்.ஐ) வடக்குப் பிரிவு இயக்குநராக இருந்தவரும், அயோத்தியில் ஆகழாய்வு செய்தவருமான, முன்னாள் தொல்பொருள் ஆய்வாளர் கே.கே. முகமது, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மிகச் சிறப்பானது என தெரிவித்துள்ளார்.
அயோத்தி நில விவகாரத்தில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்ச், நேற்று ஒருமித்த கருத்துடன், தீர்ப்பு வழங்கியது. அதன்படி, சன்னி வக்ஃப் வாரியத்திற்கு மசூதி கட்ட வேறு எங்காவது 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும் என்றும், 2.77 ஏக்கர் பரப்பளவிலான சர்ச்சைக்குரிய நிலம் இந்து தரப்புக்கு சொந்தமானது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை வழங்க முக்கிய காரணம், அயோத்தியில் நடந்த அகழாய்வுதான். அந்த அகழாய்வில், பாபர் மசூதிக்கு அடியில் ஏற்கனவே ஒரு கோவில் இருந்ததாக கண்டறியப்பட்டு அந்த அறிக்கை, உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
முதலில் சொன்னவர்
இந்த அகழாய்வு குழுவில் அங்கம் வகித்தவர்தான், கேரள மாநிலத்தை சேர்ந்தவரான, கே.கே.முகமது. 1990ல் இவர்தான், முதல் முறையாக, பாபர் மசூதிக்கு அடியில் இந்து கோயில் இருப்பதை கண்டதாக வெளிப்படையாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். 1976-77 ஆம் ஆண்டில், இவர், முதுகலை டிப்ளோமா மாணவராக இருந்தபோது, பேராசிரியர் பிபி லால் தலைமையிலான 10 பேர் கொண்ட அகழ்வாராய்ச்சி குழுவின் ஒரு நபராக இருந்தார். இந்த டீமில் இடம் பெற்றிருந்த மற்றொரு உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் (காங்.) மனைவியாகும்.
|
உண்மையை சொன்னேன்
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், கே.கே.முகமது அளித்த பேட்டியை பாருங்கள்: இது அல்டிமேட் தீர்ப்பு, மிகவும் பேலன்ஸ்சான தீர்ப்பாகும். நான் ஒரு முஸ்லீமாக, உண்மையைப் பேசினேன். ஆனால், அந்த உண்மையை சொன்னதற்காக சிலரால் வேட்டையாடப்பட்டேன். ஆனால், இன்று நான் சொன்னது உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆதாரங்கள்
கோயிலை இடித்து அதற்கு மேல் மசூதி கட்டப்பட்டது மட்டுமல்ல, அந்த கோவிலின் சில இடுபொருட்களையும் எடுத்து மசூதியை கட்ட பயன்படுத்தியுள்ளனர் என்பதை உறுதி செய்ய ஏராளமான சான்றுகள் இருந்தன. சில சமயங்களில், சில விஷயங்களைச் சொல்ல வேண்டியது அவசியம். கடந்த காலங்களில் சில முகலாய ஆட்சியாளர்கள் இந்து கோவில்களை இடித்தது உண்மைதான். அப்படியான ஆட்சியாளர்களின் தவறான செயலை ஒருவர் நியாயப்படுத்தப்படும்போது, அவரும், அந்த பாவத்தின் ஒரு பகுதியாக மாறுகிறார் என்று நான் கருதுகிறேன்.
ஓய்வு பெற்ற அதிகாரி
இந்த தீர்ப்பின் மூலம், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஆழ்ந்த திருப்தி அடைகிறேன். இவ்வாறு முகமது தெரிவித்தார். 24 ஆண்டு சேவைக்குப் பிறகு 2012 இல் அகழாய்வு பணியிலிருந்து ஓய்வு பெற்ற முகமது தற்போது கோழிக்கோட்டில் ஓய்வு காலத்தை கழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.