”இது எனக்கு அவ்ளோ சிறப்பான வருடம்”- மகிழும் சானியா மிர்சா!
டெல்லி: இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா எனக்கு இன்னும் நிறைய டென்னிஸ் வாழ்க்கை எஞ்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், இது அவருக்கு மிகவும் சிறப்பான வருடம் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நேற்று அளித்த ஒரு பேட்டியில், "எனக்கு இதைவிட சிறந்த ஆண்டு அமைவது என்பது கடினம்.
அடுத்த ஆண்டு இந்த ஆண்டை விட சிறப்பாக அமையாவிட்டாலும், இந்த ஆண்டுக்கு நிகரான வெற்றிகளை குவிக்க முடியும் என்று நம்புகிறேன். எனக்கு இன்னும் நிறைய டென்னிஸ் வாழ்க்கை எஞ்சி இருக்கிறது. இந்த சீசன்தான் எனது டென்னிஸ் வாழ்க்கையில் மிகச்சிறந்த பகுதி.
கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக ஆடி வந்தாலும், இந்த ஆண்டில்தான் என்னால் களத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடிந்தது. பல ஆண்டுகளாக கடினமாக உழைத்தது, நிறைய தியாகங்களை செய்தது உள்ளிட்டவற்றால்தான் இப்போது சாதிக்க முடிந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினாங்கிஸ்சுடன் இணைந்து சானியா மிர்சா 2 கிராண்ட்ஸ்லாம் உள்பட 9 இரட்டையர் பட்டங்களை வென்றார். அத்துடன் இரட்டையர் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் அலங்கரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.