காலி வயிற்றுடன் தூங்கும் ஏழைகளுக்கு யோகா தேவையா? லாலு கேள்வி
பாட்னா: காலி வயிற்றுடன் தூங்கும் ஏழைகளுக்கு யோகா தேவையா என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல் சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ராஜ்பாத்தில் நடந்த யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.
ஆரம்பம் முதலே யோகா தினக் கொண்டாட்டத்திற்கு கிடைத்த வரவேற்பைப் போலவே, எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், ராஷ்டிரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஏழைகளுக்குத் தேவையா...
உலக யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், காலி வயிற்றுடன் தூங்கும் ஏழைகளுக்கு யோகா தேவையா என்று பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார்.
அரசியல்...
யோகா போன்ற தனிப்பட்ட விஷயங்களை தனது சொந்த சாதனைகளாக மோடி அரசு விளம்பரப்படுத்தி வருகிறது. யோகாவை உடல் ஆரோக்கியத்துக்கான ஒன்றாக இல்லாமல், அரசியல் ரீதியாக பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்து வருவதை நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் அறிவார்கள்.
உலக வங்கி அறிக்கை...
இந்தியாவில் 14 கோடி பேர் காலி வயிற்றுடன் தூங்க செல்வதாக உலக வங்கி அறிக்கை கூறுகிறது. அப்படியிருக்க இந்த நாட்டு ஏழைகளுக்கு யோகா தேவையா?
விவசாயிகள்...
தங்கள் வயல்களில் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கு யோகா செய்ய நேரமில்லை. ரிக்ஷா ஓட்டுனர்கள், ஏழைகள், பின்தங்கியவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகளுக்கு யோகா தேவையில்லை.
பாசாங்குத்தனம்...
மாறாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுக்கே உடற்பயிற்சி தேவை. தினமும் யோகா பயிற்சி மேற்கொள்பவர்கள் வெவ்வேறு உடல் அமைப்பில் உள்ளனர். அப்படியிருக்க இந்த பாசாங்குத்தனத்துக்கு என்று ஒரு நாள் தேவையா?
நிதின் கட்காரி...
நான் யோகாவுக்கு எதிரானவன் அல்ல. ஆனால், இதன் மூலம் மக்களை ஏமாற்றுபவர்களுக்கு நான் எதிரானவன். நிதின் கட்காரி யோகா மூலம் தனது உடற்தகுதியை மேம்படுத்தியிருந்தால், அவர் ஏன் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்?" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராம்விலாஸ் பஸ்வான்...
லாலுவின் கருத்திற்கு மத்திய உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சுமார் 200 நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோகாவை நிதிஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் பழிக்கின்றனர்.
பீகார் தேர்தல்...
இதற்காக பீகார் மக்கள் சட்டசபைத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர். தேர்தல் முடிவு வந்தபின் இவர்கள் இருவரும் யோகா செய்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.