உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் 6 மாத காலம் ஆகும்.. உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தகவல்
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி: உள்ளாட்சி தேர்தல் நடத்த தொகுதி மறுவரையறை மேற்கொள்ள இருப்பதால் தேர்தல் நடத்த இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில் 1991-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை அடிப்படையில் வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும்.
தொகுதி வரையறை மேற்கொள்ள வேண்டும், உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி திமுக தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மற்றொரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு வரவுள்ளதால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதி வேண்டும் என திமுக கோரிக்கை வைத்தது.
இதனால் கோபமடைந்த உச்சநீதிமன்ற நீதிபதி இத்தனை காலமாக நாங்கள் இந்த வழக்கு விசாரித்து வருகிறோம். திடீரென தள்ளுபடி செய்ய கூறினால் எப்படி என்று கூறிய நீதிபதி மனுவை வாபஸ் பெற அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
அச்சமயம், தொகுதி மறு வரையறை பணிகள் நடைபெறவுள்ளதால் அப்பணிகள் நடைபெற இன்னும் 6 மாதங்கள் பிடிக்கும். அதன்பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் உள்ள குளறுபடிகளால் தமிழகத்தில் குழப்பம் இருப்பது கண்கூடாக தெரிகிறது. தமிழகத்தில் ஆட்சி இல்லாததையே இது காட்டுகிறது என்றும் நீதிபதி தெரிவித்தார்.