இப்படி ஒரு அசம்பாவித்தை எதிர்பார்த்திருந்தோம்.. மும்பை ரயில் நி்லைய விபத்தில் தப்பியவர்கள் குமுறல்
மும்பை ரயில் நிலையத்தில் வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.
மும்பை: எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் பரவிய வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ரயில் நிலைய பராமரிப்பு குறித்து உயிர் தப்பிய பயணிகள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
மும்பை சமீபத்தில்தான் பேய் மழையைச் சந்தித்திருந்தது. இன்றும் கூட பெரும்பாலான பகுதிகளில் காலை பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. காலை 10.30 மணியளவில் எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் மழையால் ஏராளமான மக்கள் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர்.
அப்போது ரயில் நிலையத்தில் மின்கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இதனைக் கேட்ட மக்கள் ரயில் நிலைய மேம்பாலத்தில் வேகமாக முண்டியடித்து கொண்டு சென்றனர்.
|
22 பேர் உயிரிழப்பு
நடைமேம்பாலம் குறுகிய பாதை என்பதால் பலர் தடுக்கி விழுந்தனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்தது. இதில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
30க்கும் மேற்பட்டோர் காயம்
30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள கெம் மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
|
தப்பிய பயணிகள் குமுறல்
இந்த விபத்தில் உயிர் தப்பியவர்கள் கூறுகையில், இந்த ரயில் நிலையத்தில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். அடிப்படை வசதிகளும் இங்கு கிடையாது. இதுபோன்ற அசம்பாவிதத்தை எதிர்பார்த்திருந்தோம். இன்று நடந்தே விட்டது என்று குமுறினர்.
|
ரயில் நிலைய அதிகாரிகள் தகவல்
பிசியான எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயப்படுத்தி வருகின்றர். அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை பயணிகள் புகார் கூறியும் மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால்தான் பெரும் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் இந்த விபத்து நடந்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்
சமீபத்தில்தான் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா செய்தார். புதிய அமைச்சராக பியூஷ் கோயல் பொறுப்பேற்றார். ஆனால் பயணிகளுக்குத்தான் விமோச்சனமே கிடையாது போல!