உறைய வைக்கும் பனி... வெற்று மார்போடு யோகா செய்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள்!
உறைய வைக்கும் பனிமலைகளுக்கு நடுவே ஐடிபிபி வீரர்கள் யோகா செய்து அசத்தியுள்ளனர்.
டெல்லி: இந்தோ-திபெத்தியன் எல்லைப்படை போலீஸ் வீரர்கள் இமயமலையில் நடுங்கும் குளிரில் பனி சூழ்ந்த பகுதியில், மேல் சட்டை அணியாமல் யோகா செய்த படங்கள் வெளியாகியுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 9 ஆயிரம் அடி உயரம் முதல் 18,500 அடி உயரம் கொண்ட, உறைபனி தட்பவெப்ப நிலையில் இந்தியா சீனா இடையிலான சுமார் 3,488 கி.மீ நீளமுள்ள எல்லைப்பகுதியை இரவு பகல் பாராமல், குளிரைத் தாங்கிக் கொண்டு 176 நிலைகளில் ஆயிரக்கணக்கான இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். கடந்த 1962ம் ஆண்டு இந்த எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது.
அங்கு அவர்கள் செய்யும் சாகசங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை அவ்வப்போது புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் தங்களது இணைய தளத்திலும், சமூகவலைதளப் பக்கத்திலும் ஐடிபிபி எனும் இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்புப் படை பதிவேற்றம் செய்து வருகிறது.
அந்தவகையில், சமீபத்தில் அங்குள்ள வீரர்கள் உறைபனியில் யோகா செய்த புகைப்படங்களை இந்தோ திபெத்தியன் எல்லை போலீசார் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.
அந்தப் புகைப்படங்களின் சிறப்பே, அதில் இடம்பெற்றிருந்த வீரர்கள் உறைய வைக்கும் குளிரில் சட்டை அணியாமல் வெற்று மார்பில் யோகா செய்வது போல் இருந்தது தான். இதனை சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதன்மூலம், அந்த வீரர்களின் சகிப்புத்தன்மை, உடல் வலிமை மற்றும் அவர்களது மனபலம் தெரிவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, ரியல் ஹீரோக்களான அவர்களுக்கு தங்களது சல்யூட்களையும் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.