மூன்றாவது அணிக்கு ‘டாட்டா பைபை’ சொல்லும் நேரம் வந்துவிட்டது: மோடி
கொல்கத்தா: வரும் நாடாளுமன்ற தோ்தலில் மூன்றாவது அணிக்கு பிரியாவிடை கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நேற்று கொல்கத்தாவில் பா.ஜ.க சார்பில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நரேந்திர மோடி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஆதரவுக் காற்று...
மூன்றாவது அணியைப் பற்றி பேசுபவர்கள், தற்போதைய சூழ்நிலையில் ஆதரவுக் காற்று எந்த பக்கம் வீசிக் கொண்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பா.ஜ.க ஆட்சியமைக்கும்.
பிந்தங்கிய மாநிலங்கள்....
இந்தியாவை மூன்றாம் தர நாடாக மாற்றுவதே மூன்றாவது அணியின் நோக்கமாகும். அதனால்தான் அவர்கள் ஆட்சி செய்து வரும் கிழக்கு மாநிலங்கள் அனைத்தும் பின்தங்கி உள்ளன.
பிரியாவிடை நேரம்...
இந்திய அரசியலில் இருந்து மூன்றாவது அணி என்ற கருத்திற்கு பிரியாவிடை கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. மேற்கு மாநிலங்களில் இதுவரை எந்த மூன்றாவது அணியும் ஆட்சி அமைத்ததில்லை.
மதச்சார்பின்மை பேச்சு...
எப்போதெல்லாம் தோ்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் ஏழை மக்களை பற்றியும், மதச்சார்பின்மை பற்றியும் பேசத் தொடங்கி விடுகின்றனர். ஆனால் முஸ்லிம்களின் வளர்ச்சிக்காக அவர்கள் எதையும் செய்ததில்லை. முஸ்லிம்களை வாக்காளர்களாக மட்டுமே கருதுகின்றனர்.
மறுப்பு...
நாட்டின் பிரதமர் ஆகிற வாய்ப்பு பிரணாப் முகர்ஜிக்கு இரண்டு முறை மறுக்கப்பட்டது. முதலில், 1984-ம் ஆண்டு இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்திரா காந்தி அமைச்சரவையில் மிக மூத்த அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி பிரதமராக பதவி ஏற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருக்கு அவர்கள் அந்த வாய்ப்பை தரவில்லை. அது மட்டுமல்ல. ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என (இந்திரா காந்தி) குடும்பத்தில் உணர்ந்தனர். அதனால்தான் ராஜீவ்காந்தி அரசு அமைத்தபோது, மிக மூத்த அமைச்சரான பிரணாப் முகர்ஜி அமைச்சர் ஆக்கப்படவில்லை.
சோனியாவின் தேர்வு...
மீண்டும் 2004-ம் ஆண்டு, பிரணாப் முகர்ஜிதான் மிக மூத்த அரசியல்வாதியாக இருந்தார். சோனியாகாந்தி பிரதமர் பதவி ஏற்க விரும்பாதது இயற்கைதான். அப்போது வாய்ப்பு, பிரணாப் முகர்ஜிக்கு தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மன்மோகன்சிங்கை சோனியா தேர்ந்தெடுத்து விட்டார். வங்காள மக்கள் இதை மறந்து விடக்கூடாது.
வழிகாட்டும் வங்காளம்...
நாட்டுக்கு எப்போதுமே வங்காளம் வழிகாட்டி இருக்கிறது. நீங்கள் 42 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாரதீய ஜனதா வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள். அது உங்களுக்கு 3 அடுக்கு பலனை தரும்.
மத்தியில் நான்...
மாநில அளவில், வளர்ச்சிப்பணிகளுக்கு மம்தா பானர்ஜி இருக்கிறார். மத்தியில் நீங்கள் என்னை பெற்றிருப்பீர்கள். எல்லாருக்கும் மேலே, வங்காளத்தை சேர்ந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இருப்பார்.
தேசியவாதம் எனும் ஒரே புத்தகம்....
குஜராத்தில் சிறுபான்மையினரின் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது, அரசாங்கம் என்பது தேசியவாதம் என்ற ஒரே ஒரு மதப் புத்தகத்தைதான் வைத்திருக்க வேண்டும்" என அவர் இவ்வாறு தெரிவித்தார்.