சபரிமலை சென்ற ஐய்யப்ப பக்தர் மாரடைப்பால் மரணம்
செங்கோட்டை: சபரிமலைக்குச் சென்ற தமிழக ஐய்யப்ப பக்தர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
கோயம்புத்தூர் நெல் உடையார்புரம் நேதாஜி நகர் பகுதியை சார்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகன் பாலசுதன். இவர் கடந்த மாதம் ஐய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு விரதம் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இருமுடிகட்டி 15 பக்தர்களோடு ஒரு வேனில் சபரிமலை நோக்கி புறப்பட்டார். இன்று காலை குற்றாலத்தில் குளித்து விட்டு அதன் பின் அச்சன்கோவில் ஐய்யப்பன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது வழியில் உள்ள கும்பாஉருட்டி அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது இவருக்கு திடீர் என மயக்கம் ஏற்படவே உடனடியாக செங்கோட்டை மருத்துவமனைக்கு வேனில் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரந்தது. அவர் மாரடைப்பால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். செங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோதனை சாவடியில் அதிரடி சோதனை
இதற்கிடையே, தமிழக - கேரளா எல்லையில், கேரள மாநிலம் ஆரியங்காவில் வணிகவரித்துறை, மதுவிலக்கு, போக்குவரத்து மோட்டார் வாகன சோதனை சாவடி என 3 சோதனை சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சோதனை சாவடிகளில் அளவுக்கு அதிகமாக பணப் புழக்கம் நடமாட்டம் இருப்பதாக புகார்கள் குவிந்தன.
இதையடுத்து இந்த சோதனை சாவடிகளில் கேரள மாநில லஞ்ச ஒழிப்பு ஆணையாளர் சங்கரன் ரெட்டி உத்தரவுப்படி கொல்லம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் 9 சப் இன்ஸ்பெக்டர்கள், 5 போலீசார் கொண்ட குழுவினர் இன்று காலை அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
காலை முதல் நடந்த சோதனைகளில் போக்குவரத்து சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ. 49,950 பணம் சிக்கியது. இதேபோல வணிகவரித்துறை சோதனை சாவடியில் ரூ. 3170, மதுவிலக்கு சோதனை சாவடியில் ரூ. 160 பிடிபட்டது. மொத்தமாக ரூ. 53,280 பிடிபட்டுள்ளது.