பத்திரிக்கையாளர் ஜே டே கொலை வழக்கு.. சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை.. மும்பை நீதிமன்றம் தீர்ப்பு!
பத்திரிக்கையாளர் ஜோதிர்மே டே கொலை வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பை: பத்திரிக்கையாளர் ஜோதிர்மே டே கொலை வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவனுக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.
மும்பையில் இயங்கி வரும் ஆங்கில புலனாய்வு பத்திரிக்கை ஒன்றில் வேலைபார்த்து வந்த ஜோதிர்மே டே என்ற பத்திரிக்கையாளர், கடந்த 2011 ஆண்டு கொடூரமாக சுட்டு கொலை செய்யப்பட்டார். சாலையில் பைக்கில் செல்லும் போது, மக்கள் முன்னிலையில் கொடூரமாக கொல்லப்பட்டார்.
இவர் கொல்லப்பட்ட ஜூன் 11ம் தேதி வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்பட்டது. சக பத்திரிக்கையாளர்கள் ஜிக்னா வோரா மற்றும் ஜோசப் பால்சன் உட்பட மொத்தம் 11 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். பின் இந்த வழக்கு சிபிஐ வசம் மாறிய பின் சூடுபிடித்தது. இதையடுத்து இதில் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமிற்கும் தொடர்பு இருக்குமா என்று விசாரிக்கப்பட்டது.
கடைசியில் தாவூத்தின் கூட்டாளி சோட்டா ராஜன் இதில் சம்பந்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் சோட்டா ராஜன் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இதுகுறித்து விசாரிக்கப்பட்டது. இவனின் தலைமையில்தான் ஜே டே எனப்படும் ஜோதிர்மே டே கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து வழக்கு விசாரணை நடந்து வந்தது.
தற்போது இந்த வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பத்திரிக்கையாளர்கள் ஜிக்னா வோரா மற்றும் ஜோசப் பால்சன் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர். காலை தீர்ப்பு வழங்கப்பட்டாலும், தீர்ப்பின் தண்டனை விவரம் இப்போதான் வெளியானது.
அதன்படி சோட்டா ராஜன் உட்பட மொத்தம் 7 பேர்க்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோருக்கும் ஆயுள்தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது.