தீவிரவாத மிரட்டல்.. 2 நாளில் வேலையைவிட்ட 60 போலீசார்.. காஷ்மீரில் பதற்றம்!
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல் காரணமாக காஷ்மீர் சிறப்பு காவல்படையினர் தொடர்ச்சியாக தங்கள் வேலையைவிட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்வது வழக்கமாகி உள்ளது.
டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல் காரணமாக காஷ்மீர் சிறப்பு காவல்படையினர் தொடர்ச்சியாக தங்கள் வேலையைவிட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்வது வழக்கமாகி உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் இப்படி 60 பேர் தங்கள் வேலையைவிட்டு இருக்கிறார்கள்.
காஷ்மீரில் போலீசார் மற்றும் சிறப்பு காவல்படையை சேர்ந்த வீரர்கள் தீவிரவாதிகளால் காஷ்மீரில் கடத்தி கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஜனவரியில் இருந்து மட்டும் சுமார் 37 போலீசார் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
காஷ்மீரில் போலீசார் பதவி விலகி வேண்டும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி நைகோ எச்சரிக்கை விடுத்து இருந்தான். வேலையை விடவில்லை என்றால் கொலை செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தான்.
எத்தனை பேர் வெளியேறினார்கள்
இந்த நிலையில் இந்த கொலை மற்றும் மிரட்டல் காரணமாக மொத்தமாக 60 சிறப்பு காவல்படையினர் வரை ஜம்மு காஷ்மீரில் தங்களது வேலையை விட்டு இருக்கிறார்கள். முதலில் இதை மறுத்த ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தற்போது, போலீசார் இப்படி வேலையை விட்டு செல்வது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டு இருக்கிறது. ஆனால் எத்தனை பேர் இப்படி வேலையைவிட்டு செல்கிறார்கள் என்று முழு விவரம் இன்னும் அளிக்கவில்லை.
வீடியோ
இந்த நிலையில் போலீசார், தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்பிக்க தங்கள் வேலையை விடுவதை இணையத்தில் வீடியோவாக வெளியிடுகிறார்கள். அதாவது வேலையை விடப்போவதாக கடிதம் எழுதி, அதை வீடியோவில் காட்டி பேசிவிட்டு, பின் வேலையை விடுகிறார்கள். தீவிரவாதிகளுக்கு தாங்கள் வேலையைவிட்டது தெரிய வேண்டும் என்று இப்படி செய்ததாக கூறியுள்ளனர்.
இணையத்தை நிறுத்தினார்கள்
இந்த நிலையில் தற்போது போலீசார் இப்படி வீடியோ போடுவதை தவிர்ப்பதற்காக, காஷ்மீர் அரசு, அங்கு இணையத்தை தடை செய்து இருக்கிறது. அதேபோல் தெற்கு காஷ்மீரில் இணையத்தை மொத்தமாக இரண்டு நாட்களாக துண்டித்து வைத்துள்ளது.
சம்பளம் உயர்த்தி தர முடிவு
போலீசார் வேலையைவிட்டு செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளது. இதில் பல போலீசார் 8000 ரூபாய் வரை மட்டுமே சம்பளம் வாங்குகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இன்னும் 5000 ரூபாய் சம்பளம் உயர்த்த அம்மாநில அரசு முடிவெடுத்து இருக்கிறது.