வெள்ளத்தில் சிக்கிய கடைசி நபரை மீட்கும் வரை ஓயமாட்டோம்: ராணுவ தளபதி தல்பீர்சிங்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய கடைசி நபரை மீட்கும் வரை ஓயமாட்டோம் என்று ராணுவ தளபதி தல்பீர்சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பேரழிவை சந்தித்து வருகிறது. இம்மாநிலத்தில் நாட்டின் முப்படைகளும் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படையினருக்கு உதவும் வகையில் முப்படையினரும் கூடுதல் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மீட்பு பணிகள் குறித்து கருத்து தெரிவித்த ராணுவ தளபதி தல்பீர்சிங், வெள்ளத்தில் சிக்கியிருப்போரில் கடைசி நபரை மீட்கும் வரை ராணுவம் ஓயாது என்றார்.
தற்போது மீட்புப் பணிகளில் 23 விமானப் படை விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு வருகின்றன. 6 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களத்தில் உள்ளனர். 200க்கும் மேற்பட்ட கடற்படை கமாண்டோக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.