காஷ்மீரில் போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை-தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்: ராஜ்நாத் சிங்
ஜம்மு காஷ்மீரில் போர்நிறுத்தம் நீட்டிப்பு இல்லை, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போர்நிறுத்தம் நீட்டிப்பு இல்லை என்றும் முன்பு போலவே பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "ரம்ஜான் மாத நோன்பை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக மத்திய அரசு முடிவெடுத்தது. இந்த முடிவு ஜம்மு காஷ்மீர் மீதான அன்பிலும் அமைதியிலும் அக்கறைகொண்டு எடுக்கப்பட்டது.
ரம்ஜான் நோன்பை மக்கள் அமைதியாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அமைதியான சூழல் உருவாக்கப்பட்டது." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், "தீவிரவாதிகளின் தாக்குதல் மற்றும் அவர்கள் மக்களை கொல்வதைத் தடுக்க தொடக்கத்திலிருந்தே பாதுகாப்பு படையினர் அத்தியாவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஜம்மு காஷ்மீரில் வன்முறையும் தீவிரவாதமும் இல்லாத அமைதியான சூழலை உருவாக்க பாடுபட்டு வருகிறது." என்று கூறியுள்ளார்.
மேலும், ஜம்மு காஷ்மீரில் வன்முறை தாக்குதல்களை தடுக்கும் வகையிலும் காஷ்மீரில் அமைதியான சூழல் உருவாவதை உறுதிசெய்யும் விதத்திலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இன்று முதல் தொடரலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
ரம்ஜான் நோன்பை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் தற்காலிக போர்நிறுத்தத்தை கடந்த மே 17 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த போர் நிறுத்தம் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் வேண்டுகோளை ஏற்று அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் 17 ஆண்டுகளுக்குப் பின் நடந்த முதல் போர் நிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.