புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
ஏற்கனவே, புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40 துணை ராணுவப்படையினர் வீரமரணம் அடைந்தனர். தற்போது, மீண்டும் தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், பொதுமக்கள் சிலர் காயமடைந்தனர். இதனையடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையின் ரோந்து வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்த 9 வீரர்களில் இருவர் இன்று உயிரிழந்தனர்.
அரிஹால்-லஸ்ஸிபோரா சாலை வழியாக பாதுகாப்பு படையினர் இன்று மாலை வழக்கம்போல் வாகனங்களில் சென்று ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஈட்கா அரிஹால் என்ற இடத்தின் வழியாக வந்தபோது பாதுகாப்பு படை வாகனத்தின் மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இரு வீரர்கள் உயிரிழந்தனர். இந்தநிலையில், ஜம்மு - காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் என்று தெரிகிறது. மேலும், சில தீவிரவாதி அந்த பகுதியில் மறைந்திருக்கலாம் என கருதப்படுவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக உளவுத்துறை அளித்த தகவலைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தீவிர தேடலில் ஈடுபட்டனர். இந்த தேடுதலின் போது தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.