ரவீந்திர ஜடேஜா நடத்தும் ஹோட்டலில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.. சாப்பாட்டை பார்த்து ஷாக்!
ஜடேஜாவுக்கு சொந்தமான உணவகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் , நிறைய உணவுகள் கெட்டுப் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ராஜ்கோட்: இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா, ராஜ் கோட் பகுதியில் சொந்தமாக உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். ஜட்டு புட் பீல்ட் என அழைக்கப்படும் இந்த உணவகம் மிகவும் புகழ் பெற்றது.
இந்த உணவகத்தில் ராஜ்கோட் மாநகராட்சியின் சுகாதாராத்துறை அதிகாரிகளால் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் நிறைய கெட்டுப்போன உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பழைய உணவுகள் பல குளிர்சாதனத்தில் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்த்துள்ளது.
இந்த திடீர் சம்பவத்தால் அந்தக் கடைக்கு வரும் மக்களின் கூட்டம் மொத்தமாக குறைந்துள்ளது.
ஜடேஜாவின் கடை
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தின் ராஜ் கோட்டில் இருக்கிறது ஜட்டு புட் பீல்ட். மிகவும் புகழ் பெற்ற இந்த உணவகம் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு சொந்தமானது ஆகும். மிகவும் விருப்பப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்த உணவகம் ரவீந்திர ஜடேஜாவின் கனவு ஆகும். இந்த உணவகம் ஜடேஜாவின் சகோதரி நைனா என்பவரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
உணவகங்களில் சோதனை
இந்த நிலையில் நேற்று ஜடேஜாவின் உணவகத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. ராஜ் கோட்டின் பல கடைகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இந்தக் கடையும் சிக்கியது. எதிர்பாராமல் நடத்தப்பட்ட இந்த சோதனையால் ஜடேஜாவின் சகோதரி நைனா அதிர்ச்சிக்கு உள்ளானார். ஜடேஜா தற்போது ரஞ்சி போட்டிகளுக்காக பயிற்சி எடுத்து வரும் நிலையில் வர கடையில் இந்தச் சோதனை நடந்துள்ளது.
கெட்டப் போன உணவு
சோதனையில் அவரது கடையில் மிகவும் மோசமான நிலையில் நிறைய உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 212 கிலோ பழைய உணவுகள் கொட்டப்படாமல் அப்படியே குளிர் சாதனத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அந்தக் கடையில் உணவுகளை அழித்து கொட்டுவதற்கு எந்த வசதியுமே செய்யப்படாமல் இருந்ததும் ஆய்வில் தெரியவந்தது.
இனிமேல் இப்படி நடக்காது
சோதனை அதிகாரிகள் அந்த உணவை அப்புறப்படுத்திய பின் ஜடேஜாவின் சகோதரி நைனா இந்தச் சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டார். மேலும் ''கடையில் சீக்கிரமே உணவுகளை அழிக்கும் எந்திரம் பொருத்தப்படும் , இன்னொரு முறை பழைய உணவுகள் குளிர்சாதனத்தில் வைக்கபட்டு இருக்காது'' என்று கூறி வருத்தம் தெரிவித்தார்.