தேர்தலில் நான் மட்டுமே போட்டி... அம்மா, சகோதரிக்கு 'தடை' விதித்த ஜெகன்!
ஹைதராபாத்: லோக்சபா தேர்தலில் தாம் மட்டுமே போட்டியிட்டால் போதும் என்றும் அம்மா விஜயலட்சுமியோ சகோதரி ஷர்மிளாவோ போட்டியிடக் கூடாது என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தடை விதித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரது சகோதரி ஷர்மிளா 3 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு ஜெகன் ஆதரவு தளத்தை தக்க வைத்திருந்தார். இதனால் அவரும் தேர்தலில் போட்டியிடுவார் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஜெகன் மோகன் ரெட்டியோ, குடும்பத்தில் தாம் ஒருவர் போட்டியிட்டால் போதும். மற்றவர்கள் பிரசாரம் மட்டுமே செய்யலாம்...என்று கூறியிருக்கிறார். இதை ஜெகனின் அம்மா விஜயலட்சுமியும் ஆமோதித்திருக்கிறார்.
இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த விஜயலட்சுமி, எனக்கு ஷர்மிளாவுக்கோ அரசியலில் பெரிய ஈடுபாடு கிடையாது. லோக்சபா தேர்தலில் நாங்கள் போட்டியிடவும் இல்லை. இதைத்தான் நாங்கள் ஒவ்வொருவரிடமும் கூறி வருகிறோம். எங்களுடைய ஆசையே ஜெகனை முதல்வராக்கிப் பார்ப்பதுதான் என்றார்.