தடுக்கப்பட்ட முக்கிய மசோதா.. தமிழகம் பாணியில் ஆந்திராவில் சட்டமேலவையை கலைக்க ஜெகன் அதிரடி முடிவு
அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கனவு திட்டமான மூன்று தலைநகரங்கள் அமைக்கும் திட்டத்திற்கு, சந்திரபாயு நாயுடு கட்சி பெரும்பான்மையாக உள்ள சட்டமேலவையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகன் ஆந்திராவில் சட்டமேலவையை நீக்க அதிரடியாக முடிவு செய்துள்ளார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியை மட்டும் அனைத்துக்குமான தலைநகராக அறிவிக்காமல், சட்டசபைக்கு மட்டும் அமராவதி, நிர்வாகத்திற்கு விசாகப்பட்டினம், நீதிமன்றங்களுக்கு கர்னூல் என மூன்று தலைநகரங்களாக அறிவிக்கும் திட்டத்தை முன்வைத்தார்.
இந்த திட்டத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடும் எதிர்ப்பு
இந்நிலையில் அமராவதியில் தலைநகருக்கான அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அமராவதியில் தலைநகருக்காக நிலம் கொடுத்த விவசாயிகள் தங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் முழு தலைநகரையும் அமராவதியில் தான் அமைக்க வேண்டும் என்றும் கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சட்டமேலவை
இது எதையும் சட்டைசெய்யாத ஜெகன் மோகன் ரெட்டி, மூன்று தலைநகரங்கள் அமைக்கும் விஷயத்தில் பிடிவாதமாக உள்ளார். ஆந்திர சட்டசபையில் மூன்று தலைநகரம் அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் சட்டமேலவையில் தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை.
முழு மெஜாரிட்டி
ஏனெனில் ஆந்திர சட்டமேலவையில் மொத்தம் 58 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் சந்திரபாபு நாயுடுவின் கட்சிக்கு 28 இடங்கள் உள்ளன. ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சிக்கு 8 இடங்களே உள்ளன. 2021ம் ஆண்டு தான் நிறைய இடங்கள் காலியாக உள்ளது. அதன்பிறகு தான் முழு மெஜாரிட்டி ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
ஜெகன் அதிரடி முடிவு
இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அமைச்சரவையை கூட்டி ஆந்திர சட்டமேலவையை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் மத்திய அரசு மற்றும் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என்ற சூழல் இருக்கிறது.
ஜெகன் கேள்வி
இதனிடையே இரண்டு தீர்மானங்களை தெலுங்கு தேசம் கட்சி மெஜாரிட்டியாக உள்ள சட்ட மேலவை நிராகரித்த போது சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, "அரசியல் நோக்கங்களுடன் மட்டுமே செயல்படுவதாகத் தோன்றும் இதுபோன்ற ஒரு மன்றம் நமக்கு இருக்க வேண்டுமா என்று நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். இந்த சபையை வைத்திருப்பது கட்டாயமில்லை, அது எங்கள் வசதிக்காக மட்டுமே இருக்க வேண்டும் " என்றார்.