சந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்துள்ளார்... ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு!!
அமராவதி: சந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்துள்ளார் என்று ஆந்திராவின் புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி கூறி இருக்கிறார்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளில் 151 இடங்களை கைப்பற்றியது. ஆந்திராவின் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 23 இடங்களே கிடைத்துள்ளன.
இந்த நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தனது கட்சி எம்எல்ஏக்களுடனான கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார். அப்போது," சந்திரபாபு நாடுயுடுவின் தவறுகளுக்கு கடவுள் தண்டனை கொடுத்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 23 எம்எல்ஏக்களை சந்திரபாபு நாயுடு விலை கொடுத்து வாங்கினார். ஆனால், தற்போது சந்திரபாபு நாயுடு கட்சிக்கு அதே 23 இடங்கள்தான் கிடைத்துள்ளன.
அதேபோன்று, கடந்த முறை நமது கட்சியின் மூன்று எம்பி.,க்களையும் குதிரை பேரம் நடத்தி நாயுடு விலைக்கு வாங்கினார். இந்த முறை அவரது கட்சிக்கு மொத்தம் மூன்று எம்பி.,க்களே கிடைத்துள்ளனர். இந்த அழகான திரைக்கதையை இறைவன்தான் எழுதியுள்ளான்.
ஆந்திர சட்டமன்ற குழு தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு.. நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
இந்த தேர்தலில் 50 சதவீத வாக்குகளை பெற்றிருப்பது சாதாரணமான சாதனை அல்ல. பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. மக்கள் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக புதிய உறுப்பினர்கள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.
2024ம் ஆண்டு தேர்தலில் வெற்றி என்பது வரும் 5 ஆண்டுகளில் நாம் எவ்வாறு மக்கள் நலப்பணிகளை செய்கிறோம் என்பதை பொறுத்தே அமையும் என்பதை அனைவரும் மனதில் நிறுத்தி பணியாற்ற வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட தனது கட்சி எம்பிக்களிடம் தனியாக நடந்த கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி," ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதே முதல் நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். தேர்தலின்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பாடுபட வேண்டும்," என்று அறிவுறுத்தினார்.