திருப்பதியில் ஜெகன்மோகன் ரெட்டி வழிபாடு- புதிய சர்ச்சை வெடித்தது!
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வழிபாடு நடத்தியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் சாமி தரிசனம் செய்ய வேண்டுமென்றால் ஏழுமலையான் மீதுள்ள தங்களின் நம்பிக்கையை தெரிவிக்கும் விதத்தில் அதற்குரிய விண்ணப்பத்தைப் பெற்று நிரப்பி கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும்.
இந்த விதிமுறையை கிறிஸ்தவரான ஜெகன்மோகன் ரெட்டி பின்பற்றாமல் சாமி தரிசனம் செய்து விட்டு வந்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தபோதும் இந்த விதிமுறையைப் பின்பற்றவில்லை என்று கூறப்பட்டது.
ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது, திருப்பதிக்கு சென்றபோதெல்லாம் இந்த விதிமுறையைக் கடைப்பிடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.