காங். கூட்டணி அரசின் நிர்ப்பந்தம் காரணமாகவே மோடிக்கு விசா வழங்க மறுத்தது அமெரிக்கா - ஜெகதீஷ் பகவதி
டெல்லி: முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கோரிக்கையை ஏற்றுத்தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது என்று பிரபல பொருளாதார நிபுணர் ஜெகதீஷ் பகவதி குற்றம் சாட்டியுள்ளார்.
முன்பு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்தபோது மோடிக்கு அமெரிக்க அரசு விசா வழங்க மறுத்து வந்தது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் இதற்கு தாங்கள் பொறுப்பல்ல, அமெரிக்க அரசின் முடிவு இது என்று அப்போதைய மத்திய அரசு கூறி வந்தது.
தற்போது பிரதமராக 2வது முறையாக அமெரிக்கா வந்துள்ளார் நரேந்திர மோடி. இந்த நிலையில், முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது 10 வருடமாக அவருக்கு அமெரிக்க விசா கிடைக்காமல் போனதற்குக் காரணம் முந்தைய அரசுதான் என்று பகவதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, அனைவருக்கும் இது தெரிந்ததுதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வேண்டுகோளின் பேரிலேயே மோடிக்கு விசா வழங்க மறுத்தது அமெரிக்க அரசு. இது மோடிக்குமே கூட தெரியும். ஆனால் அதை அவர் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அவர் மிகவும் எதார்த்தமான மனிதர். பிராக்டிகலான மனிதர்.
மோடிக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்காவுக்கு மன்மோகன் சிங் தலைமையிலான அரசு வலிக்காத மாதிரியே கண்டனம் தெரிவித்தது. சீரியஸான கண்டனமாக அவர்கள் தெரிவிக்கவில்லை. ஒப்புக்கு கண்டனம் தெரிவித்து நிறுத்திக் கொண்டனர். இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு அமெரிக்க அரசு சம்மதம் தெரிவித்தது, அவ்வளவுதான் என்றார் பகவதி.