திரிணாமுல் காங்., கட்சி கூட்டத்தில் "ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்"... போலீஸ் தடியடி
கொல்கத்தா: ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள் திரிணாமுல் காங்கிரஸின் கட்சி கூட்டத்தில் மீண்டும் ஒலித்தது. இதனால், போலீசார் தடியடி நடத்தியதல், பரபரப்பு ஏற்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு, மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பா்கானாஸ் பகுதியில் சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவரது காரின் முன்பு"ஜெய் ஸ்ரீராம்" என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மம்தா, காரை விட்டு இறங்கி கோஷமிட்டவர்களை கண்டித்தார்.
மேலும், கோஷம் எழுப்பியவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்கள் குற்றவாளிகள் என்றும், தன்னிடம் வேண்டுமென்றே வம்பு செய்வதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, 10 பாஜக தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக எம்பி அர்ஜூன்சிங், மம்தாவுக்கு 10 லட்சம் பேர் அஞ்சல்அட்டைகளில் ஜெய்ஸ்ரீராம் என எழுதி தொண்டர்கள் அனுப்புவார்கள் என்றும் 10 பேரை கைது செய்தது போல் முடிந்தால் 10 லட்சம் பேரை கைது செய்துபாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
இந்தநிலையில், ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள் திரிணாமுல் காங்கிரஸின் கட்சி கூட்டத்தில் மீண்டும் ஒலித்தது. பாராக்பூர் தொகுதியான, காஞ்சாப்பாரா பகுதியில், அமைச்சர்கள் தலைமையிலான கட்சி கூட்டத்திற்கு, சுமார் 200 அடி தூரத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பப்பட்டது.
இதனையடுத்து, மோதலை தடுக்கும விதமாக, காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அமைச்சர்கள் ஜோதிப்ரியோ மல்லிக் மற்றும் தபோச் ராய் ஆகியோர் பொது கூட்டம் நடந்த இடத்தை விட்டு சென்றதும், பாஜக ஆதாரவாளர்கள் 15 நிமிடங்கள் காஞ்சாப்பாரா ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்தினர். இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 10 பாஜக தொண்டர்களை உடனே விடுதலை செய்ய கோரி, காவல் நிலையத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்த தர்ணாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். மம்தா பானர்ஜி எங்கு சென்றாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை எழுப்பி, பாஜகவினர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தபடியே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.