ராம ஜென்ம பூமிக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது.. கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உரை
அயோத்தி: பல காலமாக எதிர்பார்த்த நிகழ்வு இன்று நிறைவேறியுள்ளது, இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்வுப் பூர்வமானது என்று, அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதும், அருகே அமைக்கப்பட்ட மேடையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற விஐபிகள் அமர வைக்கப்பட்டனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் உரைக்கு பிறகு, பிரதமர் மோடி ஜெய் சியாராம் என்ற கோஷத்துடன் தனது உரையை துவங்கினார்.
ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் அயோத்தியில் மட்டும் இன்று ஒலிக்கவில்லை. இந்த உலகம் முழுக்க இன்று எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுக்க உள்ள ராம பக்தர்களுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். கன்னியாகுமரி முதல் க்ஷர்பவணி வரை, கோட்டேஷ்வர் முதல் காமக்யா வரை, ஜெகந்நாத் முதல் கேதார்நாத் வரை, சோம்நாத் முதல் காஷி விஸ்வநாத் வரை இன்று முழு நாடும் ராமர் நாமத்தில் மூழ்கியுள்ளது.
29 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக அயோத்திக்கு வருகை தந்த பிரதமர் மோடி.. மேலும் சில சுவாரஸ்யங்கள்
வரலாற்று தருணம்
ராமர் கோவில் எழுப்புவதற்காக பல தலைமுறைகள் தியாகம் செய்துள்ளனர். கோவில் கட்டுமானத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பல தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த நிகழ்வு இன்று நடந்தேறி உள்ளது. இது மிகவும் உணர்வு பூர்வமானது. நமது கலாச்சாரத்தின் நவீன சின்னமாக ராமர் கோவில் விளங்கப் போகிறது. அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அயோத்தி ராமர் கோவில் நமக்கு கற்றுத் தரப் போகிறது. இந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் ராமர் கோவில் உதவப் போகிறது. ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை என்னை அழைத்தது எனது நல்ல அதிர்ஷ்டம், இந்த வரலாற்று தருணத்தை காண எனக்கு ஒரு வாய்ப்பை அளித்தது. இதற்கான நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றி.
அதிருஷ்டம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைவர்களை ராமர் ஈர்த்துள்ளார். காந்தியையும் ராமர் ஈர்த்தார். தமிழில் கம்பராமாயணம் என்றும், தெலுங்கு, ஒடியா, கன்னடம், மலையாளத்திலும் ராமாயண இதிகாசம் இயற்றப்பட்டது. ராமர் கோவில் அடிக்கல் விழாவிற்கு ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை என்னை அழைத்தது எனது அதிருஷ்டம்.
பங்களிப்பு
இந்த கோயில் கட்டப்பட்டதன் மூலம், வரலாறு உருவாக்கப்படுவது மட்டுமல்லாமல், மீண்டும் உருவாக்கம் செய்யப்படுகிறது. படகில் செல்ல ராமருக்கு பழங்குடியினர் உதவியது போல, ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்தன மலையை உயர்த்திப் பிடிக்க, குழந்தைகள் உதவியது போல, இறைவனின் திருவுள்ளத்தால், நமது பங்களிப்புடன், கோவில் கட்டுமானம் நிறைவடையும். இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள இந்தோனேஷியாவிலும், ராமாயணம் உள்ளது.
சுதந்திரம்
ராம ஜென்ம பூமிக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 15 நாட்டிற்கான சுதந்திர தினம். அதேபோன்றுதான், ராம பக்தர்களுக்கு இன்றைய தினம். தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த கோடிக்கணக்கான ராம பக்தர்களுக்கு இன்றைய நாள் முக்கியமானது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.