வக்கீலுக்கு பணம்தர முடியலை- ஜாமீனை ரத்து செய்து ஜெயிலில் போடுங்க..நிலக்கரி துறை மாஜி செயலர் பரபர மனு
டெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் தம்மால் வழக்கறிஞர் வைத்து வாதாட முடியாது என்பதால் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைத்துவிடுங்கள் என்று நிலக்கரி துறை முன்னாள் செயலர் குப்தா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் அமைந்துள்ள கமல் ஸ்பான்ஞ் ஸ்டீல் அண்டு பவர் லிமிடெட் நிறுவனம், நிலக்கரி சுரங்க உரிமத்தை முறைகேடாக பெற்றது தொடர்பான வழக்கில் குப்தாவிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவர் திடீர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், நிலக்கரி ஊழல் தொடர்பாக என் மீது 8 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளுக்கு செலவு செய்யவும், வழக்கறிஞருக்கு கட்டணம் செலுத்தவும் என்னிடம் பணம் இல்லை. ஆகையால் என் ஜாமீனை ரத்து செய்து சிறைக்கு அனுப்புமாறு குப்தா குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றத் நீதிபதி பாரத் பரஷர், இது குறித்து மீண்டும் ஒரு முறை சிந்தித்து முடிவு எடுக்குமாறு குப்தாவை கேட்டுக் கொண்டார். மேலும் குப்தாவின் மனு மீது சிபிஐ பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
நீண்ட விசாரணைக்குப் பின்னர், குப்தாவிடம் வழக்காட பணம் இல்லை என்பதால், டெல்லியில் உள்ள இலவச சட்ட உதவி மய்யத்தை அணுக நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் இதற்கும் குப்தா மறுப்பு தெரிவித்துவிட்டார்.
சிறையில் இருந்து வழக்கை எதிர்கொள்ளப் போவதாக குப்தா அளித்துள்ள மனு குறித்து அவரது மனைவிக்கும் மகனுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.