சிறையில் இந்திராணி முகர்ஜிக்கு செம அடி.. உடல் முழுக்க காயங்கள்.. சிபிஐ கோர்ட்டில் வக்கீல் புகார்
மகளை கொன்ற வழக்கில் சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜியை சிறை அதிகாரிகள் அடித்து காயப்படுத்தியுள்ளனர் என்று அவரது வழக்கறிஞர் சிபிஐ கோர்ட்டில் புகார் மனு அளித்துள்ளார்.
மும்பை: மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் மும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் இந்திராணி முகர்ஜி. அவரை சிறை அதிகாரிகள் தாக்கியதாக சிபிஐ கோர்ட்டில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ம் தேதி 45 வயதான மஞ்சு கோவிந்த் ஷெட்டி என்ற பெண் கைதி சிறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு ஜெ.ஜெ. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் அங்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெண் கையின் மரணம் சக பெண் கைதிகளை ஆத்திரமூட்டியது.
இதனையடுத்து பெண் கைதி சிறையில் போராட்டம் நடத்தினர். போராட்டம் கலவரமாக உருமாறியது. பெண்கள் போராட்டத்தின் போது, இந்திராணி முகர்ஜி, இது போன்று கைதிகளை தாக்கும் அதிகாரிகளை நாமும் தாக்க வேண்டும் என்றும் குழந்தைகளை கேடயமாக வைத்து அவர்களுக்கு எதிராக போராட வேண்டும் என்றும் பேசியதாகக் கூறப்படுகிறது. சிறையில் நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திராணியை சிறை அதிகாரிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். அதில் அவரது உடல் முழுக்க காயத் தழும்புகள் இருப்பதாக அவரது வழக்கறிஞர் சிபிஐ நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.