மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம்... உளவுத்துறை எச்சரிக்கை
ஸ்ரீநகர்: இந்திய பாதுகாப்பு படையினர் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது. இதனையடுத்து, 100 மணி நேரத்திற்குள் பதிலடி தாக்குதல் நடத்தி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்தநிலையில், இந்திய பாதுகாப்பு படையினர் மிகப் பெரிய தாக்குதல் நடத்த அந்த தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று தற்கொலைப்படைத் தீவிராதிகள் உள்பட 21 தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாகவும், தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்ட உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்கு தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாததால், பாதுகாப்பு படையினர் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரில் இன்று காலை 7 மணி முதல் 2 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு இன்னும் நீக்கப்படாத நிலையில், தொடர்ந்து ரோந்து பணி நடந்து வருகிறது. மேலும், மது கடைகள் மற்றும் பார்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்றிரவு பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தினர். இதனால், எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.