பதுக்கல்காரர்களே வெங்காயம், உருளை விலை உயர்வுக்குக் காரணம்- ஜேட்லி
டெல்லி: வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு பதுக்கல்காரர்களே காரணம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை போதிய அளவுக்கு இருப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாநில உணவு அமைச்சர்களின் மாநாட்டை ஜேட்லி கூட்டியிருந்தார். அதில் அவர் பேசுகையில், பதுக்கல்காரர்கள் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உணவுப் பொருள் உற்பத்தி அபரிமிதமாக உள்ளது. அப்படி இருந்தாலும் விலை உயர்ந்தவண்ணம் உள்ளது. எனவே இடைத் தரகர்களும், பதுக்கல்காரர்களும் வேண்டும் என்றே இவற்றை பதுக்கி வைக்கிறார்கள் என்றுதான் பொருள்.
பருவ மழை குறைவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் பதுக்கல் நடைபெறுகிறது. இதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் பதுக்கல்காரர்கள் என்றார் அவர்.