கேஜ்ரிவாலிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்ட அருண்ஜேட்லி.. எதுக்கு தெரியுமா?
தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கூறி கேஜ்ரிவால் மீது அருண்ஜேட்லி புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் ரூ.10 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் எனக் கோரியுள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் செய்ததாக அவதூறு பரப்பியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
மேலும் தம்மீது திட்டமிட்டே ஆம் ஆத்மி கட்சியினர் அவதூறு பரப்புகின்றனர்; இதற்காக ரூ10 கோடி நட்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கடந்த 17-ந் தேதி, டெல்லி ஹைகோர்ட்டில் ஆஜரானார்.
அப்போது அவருக்கும், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. குறுக்கு விசாரணையின்போது அருண் ஜேட்லியை தரக்குறைவாக ராம்ஜெத்மலானி விமர்சித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கூறி கேஜ்ரிவால் மீது அருண்ஜேட்லி புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தன்னை அவதூறாகப் பேசியதற்கு ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடும்படி ஜேட்லி கூறியுள்ளார். ஜெட்லியின் இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.