அதிக சலுகைகளை அருண் ஜேட்லி அறிவிக்காமல் போனதற்கு இதுதான் காரணமா?
பெங்களூர்: தேர்தல் கமிஷன் கெடுபிடிகளுக்கு பயந்து ஜாக்கிரதையாக போடப்பட்ட பட்ஜெட் இது என்கிறார் பெங்களூர் ஐஐஎம் கல்வி நிறுவன நிதி பிரிவு பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன்.
'ஒன்இந்தியாவிடம்' பேசிய அவர், இது ரிஸ்க் எடுக்காத பட்ஜெட். ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளதால் அதை பாதிக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்திருந்த நிலையில், அருண் ஜேட்லி இப்படி ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
அதேநேரம், மறைமுகமாக சில சலுகைகளை அறிவித்துள்ளார். குறிப்பாக, ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதியை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பது, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு நிதியை அதிகரித்திருப்பது போன்றவை தேர்தலை முன்வைத்து வெளியிடப்பட்டவையாக இருக்கலாம்.
பண மதிப்பிழப்புக்கு பிறகு வங்கிகளில் மொத்தம் சேகரிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும். பண மதிப்பிழப்புக்கு பிறகான முதல் பட்ஜெட் என்பதால் மிகப்பெரிய அளவில் சலுகைகளை மக்கள் எதிர்பார்த்தனர். வங்கிகளில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிந்தால்தான், ஏன் மத்திய அரசு அதிகப்படியான சலுகைகளை அறிவிக்கவில்லை என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றார்.