ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு- 5 அப்பீல் மனுக்கள் தள்ளுபடி!!
டெல்லி: தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க முடியாது; ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஜல்லிகட்டு போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. இத்தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.
இந்த அறிவிக்கைக்கு எதிராக 13 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று இடைக்காலத் தடை விதித்தது. ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும் கொந்தளிப்பான நிலைமை காணப்படுகிறது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று 5 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ரீகன், திருப்பதி உள்ளிட்ட 5 பேர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் மீது நீதிபதிகள் தீபக் தீபக் மிஸ்ரா, ரமணா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் பகல் 3 மணியளவில் விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் மனுதாரர்களின் பிரதிநிதியான வழக்கறிஞர் என்.ராஜாராமன், ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனால் தமிழக விவசாயிகளின் கவுரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டு விடும் என்றும், இதனால் விவசாயிகள் தாங்கள் கஷ்டப்பட்டு வளர்த்த காளை மாடுகளை கேரள இறைச்சிக் கூடத்துக்கு அனுப்பும் நிலைக்குத் தள்ளப்படுவர் என்றும் கூறினார்.
இதற்கு பதில் கேள்வி எழுப்பிய நீதிபதி மிஸ்ரா, காளை மாடுகளை தங்கள் குடும்ப உறுப்பினராகக் கருதும் விவசாயிகள் ஏன் அதனை கேரள இறைச்சிக் கூடத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். மேலும் ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். காளைகள் எதற்காக கேரள இறைச்சிக் கூடத்துக்கு அனுப்பப் படவேண்டும்? என்றார்.
ஜல்லிக்கட்டு இல்லையெனில் தேவையின் நெருக்கடியில் விவசாயிகள் காளைகளை இறைச்சிக் கூடத்துக்கு அனுப்பிவிடுவார்கள் என்று வாதிட்ட ராஜாராமன், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது காளை மாடுகள் துன்புறுத்தப்படுகிறதா என்பதை மூத்த வழக்கறிஞர்கள் அர்யமா சுந்தரம் மற்றும் ஆனந்த் குரோவர் ஆகியோர் நேரடியாக வந்து சோதனை செய்யலாம் என்று அழைப்பும் விடுத்தார்.
ஆனால், சுந்தரம் கூறும்போது, துன்புறுத்தலை தடுப்பதே 1960-ம் ஆண்டு விலங்குகள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரதான நோக்கம் என்றார்.
இந்த விசாரணையின் முடிவில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தாக்கல் செய்த 5 மேல்முறையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான இடைக்கால தடை தொடருகிறது.