”ஜல்லிக்கட்டு” தமிழர்களின் விளையாட்டே கிடையாது – சொல்கிறார் மேனகா காந்தி!
லக்னோ: ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாசாரம் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளது தமிழகத்தில் புதிய பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் தொகுதியில் இன்று பேசியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர், "ஜல்லிக்கட்டில் காளைகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் கொல்லப்படுகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள உச்ச நீதிமன்ற நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை பாஜக கடுமையாக எதிர்க்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
பழக்கப்பட்ட விலங்கினை காட்சிப்படுத்துவது என்ற பட்டியலில் இருந்து காளையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 13ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.
மேலும், தமிழகத்தை சேர்ந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று கூறினார்.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு என்றும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று கூறப்படும் நிலையில், ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாசாரம் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறி புதிய பூகம்பத்திற்கு வழிவகுத்து கொடுத்திருக்கின்றார்.