காஷ்மீரில் தீவிரவாதிகள் வெறிச் செயல்.. சிஆர்பிஎப் வீரர்கள் மீது குண்டு வீசி தாக்குதல்
ஸ்ரீநகர்: ஸ்ரீநகரின் கரண் நகர் பகுதியில், இன்று மாலை, சிஆர்பிஎஃப் வீரர்கள் டீம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் 6 பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர். சோதனைச் சாவடியில் வாகனங்களை ஆய்வு செய்யும் போது இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் அவர்களின் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
370வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிய, சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு, நீக்கி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த 2 மாதங்களாகியுள்ள நிலையில், அதற்கு பழிவாங்க, இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களும், அக்டோபர் 31 ஆம் தேதி உதயமாக உள்ளது. இந்த காலகட்டத்தில், தீவிரவாத தாக்குதல்களை அதிகரிக்க சதித் திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
இரு யூனியன் பிரதேசங்களுக்கும் துணை நிலை ஆளுநர்களை குடியரசு தலைவர் நேற்று நியமித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Jammu and Kashmir: 6 CRPF personnel injured in grenade attack by terrorists in Srinagar's Karan Nagar. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/z0uaozQIkn
— ANI (@ANI) October 26, 2019
காஷ்மீருக்கு ஐஏஎஸ் அதிகாரி கிரிஷ் சந்திரா முர்மு, துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், தற்போது நிதி அமைச்சகத்தில் செலவீனச் செயலாளர் பதவியை வகித்து வருகிறார். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தபோது, அவரின் முதன்மை செயலாளராக பதவி வகித்தவர்.
திரிபுரா மாநில 1977 ஐ.ஏ.எஸ் கேடர் அதிகாரி ராதா கிருஷ்ணா மாத்தூர் லடாக் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.