மதிய சாப்பாட்டுக்கு ராஜ்பவன் வாங்க.. தீவிரவாதிகளுக்கு காஷ்மீர் ஆளுநர் திடீர் அழைப்பு
ஸ்ரீநகர்: துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு, உணவு அருந்த, ராஜ்பவன் வாருங்கள் என்று, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தீவிரவாதிகளுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் இன்று தீவிரவாதிகள், திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். தாக்குதலில் 5 இந்திய வீரர்களும், தீவிரவாதி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். அல் உமர் முஜாகிதீன் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
ஒத்தை தலைமை என்ற பேச்சே காணோமே.. சொத்தையா முடிஞ்சு போச்சே... இதுதான் காரணமா?
எடுத்துக்கொள்ளுங்கள்
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் ஆளுநர், சத்யபால் மாலிக், வன்முறையை கைவிட தீவிரவாதிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார். அவர் இன்று நிருபர்களிடம் அளித்த பேட்டியின்போது கூறியதாவது: எங்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் வாழ்க்கையையும் உங்களுக்கு தர தயாராக உள்ளோம். ஆனால், அன்பு மற்றும் பேச்சுவார்த்தை மூலமாக அதை எடுத்துக்கொள்ளுங்கள்.
தரத் தயார்
பேச்சுவார்த்தை மூலம்தான் நீங்கள் விரும்புவது கிடைக்கும். உங்களுக்கு தனி அரசியலமைப்பு, தனி கொடி என எந்த ஆசை இருந்தாலும், அதை பேச்சுவார்த்தை மூலம் பெறுங்கள். இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு பெறுங்கள்.
தவறான வழி
தீவிரவாதிகளுக்கு இப்போது தெரியாது. இன்னும் 10 வருடங்களான பிறகு, ஐயோ.. தப்பான வழியை தேர்ந்தெடுத்துவிட்டோமோ என்ற உணர்வு வரும். ஏனெனில், வன்முறையால், என்றுமே இந்தியாவை, பணிய வைத்துவிட முடியாது.
அரசியல் தலைவர்கள்
காஷ்மீரில் தீவிரவாதிகளாக மாறிய இளைஞர்கள், வேலைவாய்ப்பு கிடைக்காமல் இதை செய்யவில்லை. பல ஆண்டுகளாக அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு தவறான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதுதான் இதற்கு காரணம்.
மதிய உணவு சாப்பிடுங்கள்
நான் காஷ்மீர் இளைஞர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். நீங்கள் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு, ராஜ்பவனுக்கு வந்து என்னுடன் மதிய உணவு அருந்துங்கள். அப்போது, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள, பாதையால், காஷ்மீர் பெறப்போகும் நன்மைகளை எனக்கு எடுத்துச் சொல்லுங்கள். நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.