முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் தேர்தல்.. பெண் வேட்பாளரால் அனந்தநாக்கில் மாற்றம் வருமா?
ஸ்ரீநகர்: முதல்முறையாக மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலை சந்திக்கும் அனந்தநாக் மாவட்டத்தில் பெண் வேட்பாளர் காலிடா பீபீயால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என வாக்காளர்கள் மத்தியில் நம்பப்படுகிறது.
370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பிறகு முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 296 வேட்பாளர்களில் 89 பேர் பெண்கள்.
லார்னூவில் 25 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 143 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க பல்வேறு வாகனங்களில் மக்கள் வந்துள்ளனர். இந்த தொகுதியானது எஸ்டி பிரிவினருக்கானது. இதில் பிஏஜிடி முன்னணியின் வேட்பாளர் காலிடா பீபீ போட்டியிடுகிறார்.
பள்ளத்தாக்கு பகுதிகளில் 140 தொகுதிகளில் போட்டியிடுவதாக பாஜக அறிவித்த நிலையில் இதுவரை ஒரு வேட்பாளரும் அக்கட்சி சார்பில் களமிறக்கப்படவில்லை. முதல் முறையாக வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று பீபீயின் வீடு முழுவதும் பார்வையாளர்களால் நிரம்பியது.
இந்த பீபீயின் கணவர் குல்சர் அகமது கடானா, இவர் மெஹபூபா கட்சி தொண்டர். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் முக்கிய பிரச்சினைகளாக சாலைகள், மின்சாரம், மருத்துவமனைகள் ஆகியவை உள்ளன.
முதல்முறையாக வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அனந்தநாக்கில் ஸ்ரீநகர் முதல் லார்னூ வரை 120 கி.மீ. தூரத்திற்கு வரை தேர்தலுக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.
ஆனால் தண்டிபோரா கிராமம் வந்தவுடன் அங்கு ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில் வேட்பாளரின் பெயர் காலிடா பீபீ என உள்ளது. அதில் பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.