வதந்தி பரவுவதை தடுக்க.. போலி டுவிட்டர் கணக்குகளை முடக்கியது டுவிட்டர்
ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் 370 சட்டம் நீக்கப்பட்டது குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படலாம் என்பதால் போலியாக உள்ள டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
ஜம்மு- காஷ்மீரில் கடந்த சில நாட்களாக ராணுவக் குவிப்பு, 144 என பதற்றம் நிலவி வந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.
இதையடுத்து அங்கு 144 தடையுத்தரவு போடப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வரும் 15-ஆம் தேதி வரை இதே நிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி 144 தடையுத்தரவு நீக்கப்பட்டது. மக்கள் கடைகளுக்கு செல்லவும் மசூதிகளில் தொழுகை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. பக்ரீத் திருநாள் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்து சமூகவலைதளங்களில் சிலர் தேவையற்ற கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
இதனால் போலி டுவிட்டர் கணக்குகளை முடக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 4 போலி கணக்குகள் முடக்கப்பட்டன. இது போன்று வதந்திகளை பரப்பி வரும் மேலும் 4 போலி கணக்குகள் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.