காஷ்மீரில் மீண்டும் சோகம்.. தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் பலி
Recommended Video
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில், இன்று அதிகாலை, தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
புல்வாமா மாவட்டத்தின் பின்க்ளான் என்ற பகுதியில், பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு எதிராக இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து 2 தீவிரவாதிகள், ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், கடந்த 14ம் தேதி, சிஆர்பிஎஃப் ஜவான்கள் மீது தாக்குதல் நடத்தி, 40 பேர் கொல்லப்பட காரணமாக இருந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின், அதில் அகமது தார் என்பவருடன் தொடர்புள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதலின்போது, 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள், ஸ்ரீநகரிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, 4 வீரர்களும் பலியாகினர்.
எதிர்தரப்பில் 1 தீவிரவாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அரசு தரப்பில் இந்த மரணம் தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
கடந்த சனிக்கிழமை, பாகிஸ்தான் எல்லையில் வெடிகுண்டு தாக்குதலில் இந்திய ராணுவ மேஜர் ஒருவர் பலியாகியிருந்த நிலையில், இன்றைய சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.