ஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை... ராணுவ வீரர் வீரமரணம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள ரத்னிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, எல்லை பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இணைய சேவை நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு படையினர் என்கவுண்டரில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை முதல் நடந்து வரும் இந்த தாக்குதலில், பல்ஜீத் சிங் என்ற பாதுகாப்பு படை வீரர் வீர மரணம் அடைந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார்.
மேலும், தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளனர்.
Jammu and Kashmir: Army Jawan Baljeet Singh lost his life in an encounter with terrorists in Pulwama earlier today. pic.twitter.com/iGSBWCojpf
— ANI (@ANI) February 12, 2019
இதற்கிடையே, கடந்த சில தினங்களாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் பூஞ்ச் மாவட்ட எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். துப்பாக்கி மற்றும் சிறிய குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்துவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படையினர் பதற்றமான பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். பதிலடி தாக்குதல் நடத்தவும் தயாராக உள்ளனர்.