ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் கொலை...பாதுகாப்பில் இருந்து நழுவிய 10 போலீசார் கைது!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாஜக தலைவர் ஷேக் வசீம் பாரி கொலை செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பாதுகாப்புப் பணியில் இருந்த 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இவரை லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு சுட்டுக் கொன்றதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. தீவிரவாதிகள் வந்து சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது.ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ஷேக் வசீம் பாரி மற்றும் அவரது தந்தை, சகோதரர் மூவரையும் தீவிரவாதிகள் புதன்கிழமை இரவு சுட்டுக் கொன்றனர். முதலில் இதற்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது. இதையடுத்து, ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட் என்ற புதிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹீதின் தீவிரவாத அமைப்புகளின் கூட்டு அமைப்புதான் இந்த புதிய அமைப்பு என்று ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பந்திபோரா மாவட்டத்தில் இருக்கும் தங்களது வீட்டுக்கு கீழே கடையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொண்டு இருக்கும்போது ஷேக் வசீம், அவரது தந்தை பஷீர் அகமது, சகோதரர உமர் பஷீர் ஆகியோர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் மூவரும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு என்று சிறப்பு போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். ஆனால், இவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அந்த இடத்தில் சிறப்பு போலீசார் இல்லை என்று கூறப்படுகிறது. இவர்களுடன் பாதுகாப்பிறகு நிற்காமல், அந்த நேரம் பார்த்து இந்த சிறப்பு போலீசார் அனைவரும் அந்தக் குடியிருப்பின் முதல் மாடியில் நின்று கொண்டு இருந்துள்ளனர்.
பணியில் இருந்து தவறிய குற்றத்திற்காக பத்து சிறப்பு போலீசாரும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பைக்கில் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் மூவரின் தலையில் சுட்டுள்ளனர். இதுகுறித்து காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் கூறுகையில், ''போலீஸ் நிலையத்தில் இருந்து 10 மீட்டர் தொலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். மூன்று தீவிரவாதிகளில் ஒருவர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது'' என்றார்.
குரும்பா, குரும்பர், குருமன் மக்களை குருமன்ஸ் என பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும்: கனிமொழி
ஷேக் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் பதிவிட்டுள்ளார். பாஜக தலைவர் நட்டா தனது ட்விட்டில், ''கோழைத்தனமாக ஷேக்கை சுட்டுக் கொன்றுள்ளனர். இது பாஜக கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு. அவர்களது குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது தியாகம் நீர்த்துப் போகாது'' என்று பதிவிட்டுள்ளார்.