காஷ்மீர் கலவரம்... அமர்நாத் யாத்திரை சென்ற 5000 தமிழக பக்தர்கள் தவிப்பு... விரைந்து மீட்க கோரிக்கை
ஸ்ரீநகர்: காஷ்மீர் கலவரம் காரணமாக அமர்நாத் யாத்திரை சென்ற சுமார் 5 ஆயிரம் தமிழக பக்தர்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்க வேண்டும் என தமிழக அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2ம் தேதி பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை தொடங்கியது. அடுத்தமாதம் 18ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் காஷ்மீரில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கு பயங்கரவாதி வானி சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு கண்டனம் தெரிவித்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இதனால் தற்காலிகமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது.
மாநிலத்தில் சில இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அமர்நாத் யாத்திரை சென்றுள்ள பக்தர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக பக்தர்கள்...
தமிழகத்தில் இருந்தும் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை சென்றுள்ளனர். திடீர் கலவரத்தால் இவர்கள் உரிய இருப்பிட வசதியின்றி ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவதி...
ஆனால், அங்கு போதிய உணவு, தண்ணீர், கழிப்பிட வசதிகள் இல்லாமல் அவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழக பக்தர்களில் அதிக முதியோர்கள் உள்ளதால், அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இவர்களால் யாத்திரையை தொடரவும் முடியாமல், தமிழகம் திரும்பி வரவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.
கவலை...
மேலும், அங்கு மொபைல் போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால், தங்களது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமலும் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.
கோரிக்கை...
இது தொடர்பாக தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, ராணுவ முகாமில் உள்ள தமிழக பக்தர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்வர் நடவடிக்கை...
இதற்கிடையே காஷ்மீர் கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் மெகபூபா, விரைவில் அங்கு அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.