ஜம்மு வெள்ளத்தில் கரை ஒதுங்கிய துப்பாக்கிகள்- பொதுமக்கள் பீதி!
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு இடங்களில் வெள்ளம் வடிந்து வரும் நிலையில், ஆங்காங்கே துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் கரை ஒதுங்கி இருப்பது அப்பகுதி மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளப்பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ராணுவ நிலைகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் அங்கிருந்த ராணுவ வீரர்கள் பாதுகாப்பான வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தனர். இதனால், அங்கிருந்த ராணுவத்திற்கு சொந்தமான துப்பாக்கி, வெடிகுண்டுகள் மற்றும் கண்ணி வெடிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில் தற்போது அங்கு வெள்ளம் வடிந்து வருகிறது. இதனால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் கரை ஒதுங்கி வருகின்றன. அவற்றில் துப்பாக்கி உள்ளிட்ட ராணுவப் பொருட்களும் கிடப்பதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதையடுத்து, ராணுவத்தினர் தங்கள் ஆயுதங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே சில இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்கள் ஒரே பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதாகவும், தங்களை கண்டு கொள்ள வில்லை என்றும், பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.