ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட 2 மாத தடை நீக்கம்- இன்று முதல் அனுமதி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஆகஸ்ட் 2ந்- தேதி அமர்நாத் யாத்திரையை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் அமர்நாத் யாத்ரீகர்களும் சுற்றுலா பயணிகளும் ஜம்மு காஷ்மீரை விட்டு உடனே வெளியேற அறிவுறுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்கிற உளவுத்துறை தகவலால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மத்திய அரசு அப்போது தெரிவித்தது. அதன் பின்னர் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
20 வருடத்தில்... காலா பார்த்தேன்.. அதுக்குப் பிறகு இப்பத்தான்.. தமிழிசை புளகாங்கிதம்
இருளில் காஷ்மீர்ல்
மேலும் ஆயிரக்கணக்கானோர் அடுத்தடுத்து காஷ்மீர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த சூழலில் ஆகஸ்ட் 5-ந் தேதி திடீரென ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்றது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் என்கிற மாநிலமே ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
ஊடக கட்டுப்பாடுகள்
இது சர்வதேச விவகாரமாக உருவெடுத்தது. ஜம்மு காஷ்மீர் ஊடகங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கையே முடங்கி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு அப்படி எதுவுமே இல்லை என கூறியது. உண்மை நிலையை அறிய சென்ற குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஶ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அனுப்பப்பட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் தலையீடு
பின்னர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு மெல்ல மெல்ல காஷ்மீர் நிலவரம் வெளியே தெரிய வரத் தொடங்கி இருக்கிறது. அண்மையில் வீட்டு சிறையில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை கட்சி நிர்வாகிகள் சந்திக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருந்தது.
காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்
தற்போது ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாஜக மற்றும் சிறு கட்சிகளைத் தவிர பிரதான கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. காங்கிரஸ் கட்சி தேர்தலை புறக்கணிப்பதாகவே அறிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு ஆகஸ்ட் 2-ந் தேதி விதிக்கப்பட்டிருந்த தடையையும் மத்திய அரசு நீக்கி இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் இன்று முதல் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.