மீண்டும் 370வது பிரிவு... காஷ்மீர் அரசியல் கட்சிகளின் 'குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி' உதயம்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட அம்மாநில அரசியல் கட்சிகள் இணைந்து குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி இருப்பதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் 370வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் எனும் இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.
காஷ்மீர் மாநிலத்தில் பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது பொதுபாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. பல மாத சிறைவாசங்களுக்குப் பின்னர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா - ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். 14 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் மற்றொரு முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி 2 நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்து விடுதலையான மெகபூபா முப்தியை பரூக் அப்துல்லாவும் உமர் அப்துல்லாவும் நேரில் சந்தித்து வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாஜக அல்லாத அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் மீண்டும் 370வது பிரிவை அமல்படுத்துவதற்கான போராட்ட வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, அனைத்து அரசியல்களும் இணைந்து குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி உள்ளோம். கடந்த ஆண்டு 370-வது பிரிவு ரத்து செய்யக் கூடாது என்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி குப்கரில் பிரகடனம் வெளியிட்டோம். அந்த பிரகடனத்தை செயல்படுத்துவதற்கான ஒரு அமைப்பாக இது செயல்படும் என்றார். இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் உடல்நலக் குறைவால் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புதிய கூட்டணியில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் இடதுசாரிகளும் இடம்பெற்றுள்ளன.