70 நாட்களுக்குப் பின் காஷ்மீரில் நாளை மறுநாள் முதல் மீண்டும் செல்போன் சேவைகள்!
ஸ்ரீநகர்: 70 நாட்களுக்குப் பின் ஜம்மு காஷ்மீரில் நாளை மறுநாள் முதல் மீண்டும் செல்போன் சேவைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து, யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு ஆகிய அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. அதற்கு முன்னதாக எதிர்ப்பு போராட்டங்களை அடக்கும் வகையில் தகவல் தொடர்பு அம்மாநிலத்தில் முழுமையாக துண்டிக்கப்பட்டது.
மேலும் ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதனால் காஷ்மீரில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. தற்போது ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் இன்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம், ஜம்மு காஷ்மீரில் திங்கள்கிழமை முதல் அனைத்து போஸ்ட் பெய்ட் செல்போன் சேவைகளும் இயங்கும். சுற்றுலா தலங்களில் இணைய சேவையும் கிடைக்கும் என்றார்.
முன்னதாக இன்று செல்போன் சேவைகள் மீண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப பிரச்சனைகளால் திங்கள்கிழமை முதல் சேவைகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.